3416. | 'முத் தேவரின் மூல முதற் பொருள் ஆம் அத் தேவர் இம் மானிடர்; ஆதலினால், எத் தேவரொடு எண்ணுவது? எண்ணம் இலாய்! பித்தேறினை ஆதல் பிழைத் தனையால். |
இம் மானிடர் - (மானுடச் சட்டை தாங்கி உள்ள) மானிடர்; முத்தேவரின் மூல முதற் பொருள் ஆம் அத் தேவர் ஆதலினால் - மூன்று மூர்த்திகளுக்கும் மூல முதல் பொருள் ஆதலால்; எத் தேவரொடு எண்ணுவது - (இவர்களை) எந்தத் தேவர்களாகக் கொண்டு நினைப்பது; எண்ணம் இலாய் - ஆய்ந்து அறியும் தன்மை இல்லாதவனே!; பித்தேறினை ஆதல் பிழைத்தனை - அறிவு மயங்கினை ஆதலால் (இந்தக்) குற்றம் செய்தாய்; ஆல் - அசை. இம் மானிடர் முத்தேவருக்கும் மூல முதலானவர் ஆதலால் இவரை எத் தேவரொடு எண்ணுவது. நீ பித்தேறினை ஆதலால் இக் குற்றம் செய்தாய் என்ற படி பல தேவர்களை ஏவல் கொண்டு வாழ்ந்த நீ இவர்களுக்குச் செய்த பிழை வீணாகாது பயன் தரும் என்பதாம். பித்து - காம மயக்கமும் ஆம், பிழைத்தனை - குற்றம் செய்தாய். 14 3417. | 'புரம் பற்றிய போர் விடையோன் அருளால் வரம் பெற்றவும், மற்று உள விஞ்சைகளும், உரம் பெற்றன ஆவன- உண்மையினோன் சரம் பற்றிய சாபம் விடும் தனையே. |
புரம் பற்றிய - முப்புரங்களும் பற்றி எரியச் செய்த; போர் விடையோன் அருளால் - போர் ஆற்றல் உள்ள காளை வாகனனாகிய சிவபிரானது அருளால்; பெற்றவும் வரம் - (நீ) பெற்றுள்ள வரங்களும்; மற்று உள விஞ்சைகளும் - மற்றும் உள்ள போர் வித்தைகளும்; உண்மையினோன் - (அழியா) உண்மைப் பொருளாக உள்ள இராமன்; சாபம் பற்றிய சரம் விடும்தனையே - வில்லில் தொடுத்த அம்பை விடுகின்ற வரையில்; உரம் பெற்றன ஆவன - வலிமை உள்ளனவாம். |