பழங்களின் கொத்தினை ஒப்பனவாகிய; தலை கொண்டு - (இராவணனது) பத்துத் தலைகளைக் கொண்டு; இவன் கொண்டன என்ற ஆசை பத்திற்கும் - இவன் (வெற்றி) கொண்டன என்று கூறப்படுகின்ற திசை பத்திற்கும்; இன்றே பலி ஈவது பார்த்தி - இப்பொழுதே (நான்) பலியாகக் கொடுப்பதை பார்ப்பாயாக; என்றான்- என்று சடாயு கூறினான். சீதை அழுது கணணீர் விடுதல் கண்ட சடாயு, 'நீ மனந்தளராதே பனம் பழக் கொத்துப் போல் உள்ள இராவணனின் பத்துத் தலைகளையும்அவன் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகின்ற பத்துத் திசைகளுக்கும்நான் பலியாகக் கொடுக்கப் போவதைப் பார்ப்பாயாக' என ஆறுதல்கூறினான். ஆலி - கண்ணீர் தத்துற்று - கலக்கம் அடைந்து. தாலபலம் - பனம்பழம் ஆசை - திசை. பலி - கடவுளர்க்குத் தரும்உணவு. இங்கு இராவணனின் பத்துத் தலைக்குப் பனம் பழக் கொத்துஉவமையாக வந்தது. 20 சடாயு போரிடல் 3423. | இடிப்பு ஒத்த முழக்கின், இருஞ் சிறை வீசி எற்றி, முடிப் பத்திகளைப் படி இட்டு, முழங்கு துண்டம் கடிப்பக் கடிது உற்றவன், காண்தகும் நீண்ட வீணைக் கொடிப் பற்றி ஒடித்து, உயர் வானவர் ஆசி கொண்டான். |
இடிப்பு ஒத்தமுழக்கின் - இடியை ஒத்த பேரொலி உண்டாகும் படி; இருஞ்சிறை வீசி எற்றி - பெரிய (தன்) சிறகுகளை வீசி அடித்தபடி; கடிது உற்றவன் - விரைவாகப் பறந்து வந்தவனாகிய (சடாயு); முடிப் பத்திகளைப் படி இட்டு - (இராவணனது) கீரிட வரிசைகளை நிலத்தில் தள்ளி; முழங்கு துண்டம் கடிப்ப - பேரொலியிடும் (அவன் தலைகளை) (தன்) (அலகினால்) துண்டுகளாகச் (செய்ய வந்தவன்); காண் தகும் நீண்ட வீணைக் கொடிப் பற்றி ஒடித்து - காண அழகான நீண்ட வீணையின் வடிவம் எழுதப்பட்ட (அவனது) கொடியைப் பற்றி ஒடித்து; உயர் வானவர் ஆசி கொண்டான் - சிறப்புடைய தேவர்களின் வாழ்த்துகளைப் பெற்றான். இராவணனது தலை வரிசையை நிலத்தில் தள்ளித் துண்டாக்கப் பேரொலியுடன் இருஞ்சிறை வீசி வந்த சடாயு அவனது வீணைக் கொடியை ஒடித்து வானவர் ஆசி கொண்டான் என்க. வான்மீகத்தில் இராவணனுக்குரிய கொடி மனிதத் தலை வடிவம் எழுதப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கம்பர் நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவினை உடையானது கொடியை இசைத் தொடர்புடைய வீணைக் கொடியாக அமைத்துள்ள திறம் தேர்க. பத்தி - வரிசை, படி - நிலம் இருஞ்சிறை - பண்புத்தொகை. கொடிப் பற்றி - இரண்டன் தொகையில் செய்யுளின்பம் கருதி மிக்கது. 21 |