பக்கம் எண் :

சடாயு உயிர் நீத்த படலம் 587

3424. அக் காலை, அரக்கன், அரக்கு உருக்கு
     அன்ன கண்ணன்,
எக் காலமும், இன்னது ஓர்
     ஈடு அழிவுற்றிலாதான்
நக்கான், உலகு ஏழும்
     நடுங்கிட; நாகம் அன்ன
கைக் கார்முகத்தோடு கடைப்
     புருவம் குனித்தான்.

    எக்காலமும் - முன்பு எப்பொழுதும்; இன்னது ஓர் ஈடு
அழிவுற் றிலாதான் -
இத்தகைய ஒரு பெருமை அழிவு
அடைந்திராதவனாகிய; அரக்கன் - அரக்கன் ஆகிய இராவணன்;
அக்காலை - (தன் கொடி அறுபட்ட) அப்பொழுது; உருக்கு அரக்கு
அன்ன கண்ணன் -
உருக்கிய அரக்கைப் போன்று (சினத்தால்
சிவந்த) கண்களை உடையவனாய்; உலகு ஏழும் நடுங்கிட நக்கான்
-
உலகம் ஏழும் நடுங்கும்படி சினங்கொண்டு சிரித்தான்; நாகம்
அன்ன கைக்கார் முகத்தோடு -
மலையைப் போன்று தன் கையில்
உள்ள வில்லுடன்; புருவக் கடை குனித்தான் - (தன்) புருவங்களின்
நுனியையும் வளைத்தான்.

     இதற்கு முன் எப்போதும் இது போல் தன் பெருமை கெடாத
இராவணன் சினங் கொண்டு சிரித்துத் தன் வில்லையும் புருவத்தையும்
வளைத்தான் என்க. ஈடு - பெருமை. நாகம் - மலை, கார்முகம் -
வில். கடைப் புருவம் - புருவ நுனி, நகுதலும் புருவ நுனியை
வளைத்தலும் சினக்குறி என்க.                                22

3425. சண்டப் பிறை வாள்
     எயிற்றான் சர தாரை மாரி
மண்ட, சிறகால் அடித்தான் சில;
     வள் உகீரால்
கண்டப்படுத்தான் சில;
     காலனும் காண உட்கும்
துண்டப் படையால், சிலை துண்ட
     துண்டங்கள் கண்டான்.

    பிறைவாள் சண்ட எயிற்றான் - பிறைநிலவு போன்ற ஒளி
பொருந்திய பற்களை உடைய இராவணனது; சர தாரை மாரி -
அம்புகளாகிய மழையின் மிகுதி; மண்ட - (தன்னை) மிகுதியாக
நெருங்க; சில சிறகால் அடித்தான் - சடாயு அவற்றுள் சிலவற்றைத்
தன் சிறகால் அடித்து விழுத்தினான்; சில வள் உகீரால் கண்டப்
படுத்தான் -
சிலவற்றைத் தன் கூர்மையான (கால்) நகங்களால்
துண்டுபடுத்தினான்; சிலை - வில்லைக்; காலனும் காண உட்கும்
துண்டப் படையால் -
யமனும் காண அஞ்சும் (தன்) மூக்காகிய
படைக் கலத்தால்; துண்ட துண்டங்கள் கண்டான் - துண்டு
துண்டுகளாக ஆக்கினான்.