பக்கம் எண் :

சடாயு உயிர் நீத்த படலம் 591

    அறுத்தானை - (தன்) கவசத்தை மூட்டு அறுத்த
சடாயுவினுடைய; தட மார்பில் - பரந்த மார்பில்; அரக்கனும்
ஐம்பதொடு ஐம்பது அம்பு செறித்தான் -
அரக்கனாகிய
இராவணனும் நூறு அம்புகளை அழுந்துமாறு எய்தான்; செறித்தலும்
அவன் அவ்வாறு (அம்புகளைப்) பதியுமாறு அழுத்திய அளவில்;
தேவர் அஞ்சி வெறித்தார் -
தேவர்கள் அஞ்சித் திகைத்தார்கள்;
வெறியாமுன் - (அவர்கள் அவ்வாறு) திகைப்பதற்கு முன்பே;
பறவைக்கு இறை - (கழுகு என்னும்) பறவைகளுக்கு அரசன் ஆகிய
சடாயு; விண்ணவர் பண்ணை ஆர்ப்ப - தேவர் கூட்டம் மகிழ்ச்சிப்
பேரொலி செய்ய; இராவணன் வில்லைப் பல்லால் பறித்தான் -
இராவணனது வில்லைத் (தன்) அலகினால் இழுத்துப் பிடுங்கினான்.

     தன் கவசத்தைப் பிளந்த சடாயுவின் மீது இராவணன் நூறு
அம்புகளை எய்தான். அது கண்டு வானவர் திகைத்தனர். உடனே
சடாயு பாய்ந்து தேவர்கள் மகிழ்ச்சிப் பேரொலி செய்ய அவனது
வில்லைப் பறித்தான். வெறித்தல் - திகைத்தல், பல் - ஈண்டு மூக்கு,
பண்ணை - கூட்டம், அறுத்தான் - வினையாலணையும் பெயர்.
தடமார்பு - உரிச்சொல் தொடர். முந்தைய பாடலும் இதுவும்
அந்தாதித் தொடையில் அமைந்துள்ளமை காண்க. சடாயு இராவணன்
போர் தொடர்ந்து இடையீடின்றி நடந்தது.                          28

3431. எல் இட்ட வெள்ளிக் கயிலைப்
     பொருப்பு, ஈசனோடும்
மல் இட்ட தோளால் எடுத்தான்
     சிலை வாயின் வாங்கி,
வில் இட்டு உயர்ந்த நெடு மேகம்
     எனப் பொலிந்தான்-
சொல் இட்டு அவன் தோள் வலி,
     யார் உளர், சொல்ல வல்லார்?

    எல் இட்ட - ஒளி பொருந்திய; வெள்ளிக் கயிலைப்
பொருப்பு -
வெள்ளி போல் (வெண்ணிறம்) விளங்கும் திருக் கைலாய
மலையை; ஈசனோடும் - சிவபிரானோடு; மல் இட்ட தோளால்
எடுத்தான் -
(தன்) வலிமை மிக்க தோள் ஆற்றலால் எடுத்தவனாகிய
(இராவணனது); சிலை வாயின் வாங்கி - வில்லை மூக்கால் பறித்துக்
(கௌவி); வில் இட்டு உயர்ந்த நெடுமேகம் எனப் பொலிந்தான் -
இந்திரவில் விளங்க உயர்ந்த பெரிய மேகம் என்னுமாறு (அச்சடாயு)
விளங்கினான்; அவன் தோள் வலி - (எனவே) அச்சடாயுவின்
தோளாற்றலை; சொல் இட்டுச் சொல்ல வல்லார் யார் உளர் -
சொற்களைக் கொண்டு சொல்லி (விளக்க) வல்லவர்கள் யாவர் உளர்.
ஒருவருமில்லை என்பதாம்.

     வெள்ளியங்கிரியினை விடையின் பாகனோடு அள்ளிய தோள்
வலி உடைய இராவணனது வில்லைப் பறித்து வாயில் கவ்விக்
கொண்டு வானில் நீண்ட மேகம் போல் விளங்கிய சடாயுவின்
தோளாற்றலைச் சொற்களால்