சடாயு தேர்க் குதிரைகளைக் கொன்று (3438) தேர்ப் பாகனையும் அழித்தமை (3436) யால் இராவணன் சீதையைத் தேரில் கொண்டு செல்ல முடியாமையால் நிலத்தொடு பருத்த தோள் மீது ஏந்தி இலங்கையை நோக்கிச் சென்றான் என இப்பாடலில் கவிஞர் கூறியுள்ளார். மீ - மேல், மண் - பர்ண சாலையொடு பெயர்த்து எடுக்கப்பட்ட மண். இதனை "கீண்டான் நிலம் யோசனை கீழொடு மேல் (3390) கொண்டான் உயர் தேர் மிசை (3391) என்ற கவிஞர் வாக்கால் அறிக. 50 | 3453. | விண்ணிடை வெய்யவன் ஏகும் வேகத்தால், கண்ணொடு மனம் அவை சுழன்ற கற்பினாள், உள் நிறை உணர்வு அழிந்து ஒன்றும் ஓர்ந்திலள்; மண்ணிடை, தன்னையும் மறந்து, சாம்பினாள். |
விண்ணிடை - வான வெளியில்; வெய்யவன் ஏகும் வேகத்தால் - கொடியவன் ஆகிய இராவணன் செல்லுகின்ற வேகத்தினால்; கண்ணொடு மனம் அவை - கண்களும் மனமும் ஆகிய அவை; சுழன்ற கற்பினாள் - சுழலும் கற்புடையவள் ஆன சீதை; உள் நிறை உணர்வு அழிந்து - உள்ளத்தில் நிறைந்த அறிவு அழியப் பெற்று; ஒன்றும் ஓர்ந்திலள் - யாதொன்றையும் உணர முடியாதவளாகி; மண்ணிடை தன்னையும் மறந்து சாம்பினாள் - நிலத்தில் தன்னையும் மறந்து மூர்ச்சை அடைந்து சோர்ந்து கிடந்தாள். இராவணன் வானவெளியில் மண்ணொடும் கொண்டு போன வேகத்தால் சீதை கண்ணும் மனமும் சுழன்று அறிவு அழிந்து மயங்கி விழுந்தாள். ஓர்ந்திலள் - முற்றெச்சம். 51 சடாயு வானம் நோக்கி இரங்குதல் | 3454. | ஏகினன் அரக்கனும்; எருவை வேந்தனும், மோக வெந் துயர் சிறிது ஆறி, முன்னியே, மாகமே நோக்கினென்; வஞ்சன் வல்லையில் போகுதல் கண்டு, அகம் புலர்ந்து சொல்லுவான்: |
அரக்கனும் - அரக்கனாகிய இராவணனும்; ஏகினன் - (மேல் கூறியவாறு) சென்றான்; எருவை வேந்தனும் - கழுகுகளுக்கு அரசனாகிய |