| எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றை, இன்னே, கண்ட வானவர்களோடும் களையுமாறு, இன்று காண்டி. |
தனி ஒருத்திபெண் தன்னை - தனித்து (த் துணையின்றி) இருந்த பெண் ஒருத்தியை; பேதை வாள் அரக்கன் - அறிவற்ற வாளேந்திய அரக்கன்; பற்றிக் கொண்டனன் ஏக - பற்றிக் கொண்டு செல்ல; நீ இக் கோளுற - நீ இத்தகைய நிலையை அடைய; குலுங்கல் செல்லா - நடுங்காது நின்ற (பேரவலம் கண்டும் வாளாயிருந்த); எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றை - எட்டுத் திசைகளை எல்லையாகக் கொண்ட உலகங்களாகிய இவற்றையெல்லாம்; கண்ட வானவர்களோடும் - (இச் செயல்) கண்டு (எதுவும் செய்யாமல் வாளாவிருந்த) தேவர்களோடும்; இன்று - இன்றைக்கு; இன்னே - இப்பொழுதே; களையுமாறு - (நான்) முழுவதும் அழித்தலை; காண்டி - நீ பார்ப்பாயாக என்றவாறு. இத்துணைக் கொடுமைகள் நடந்தும் நடுங்காத உலகையும், தடுக்காத தேவர்களையும் இப்பொழுதே அழிப்பேன் நீ பார் என்று இராமன் சினந்து சடாயுவிடம் கூறினான். கொண்டனன் - முற்றெச்சம், செல்லா - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். 117 3520. | 'தாரகை உதிருமாறும், தனிக் கதிர் பிதிருமாறும், பேர் அகல் வானம் எங்கும் பிறங்கு எரி பிறங்குமாறும், நீரொடு நிலனும் காலும், நின்றவும், திரிந்த யாவும் வேரொடு மடியுமாறும், விண்ணவர் விளியுமாறும். |
தாரகை உதிருமாறும் - (என் வில்லாற்றலால்) விண்மீன்கள் உதிரும் தன்மையையும்; தனிக் கதிர் பிதிருமாறும் - ஒப்பற்ற கதிரவன் பொடியாகிச் சிதறும் தன்மையையும்; பேர் அகல் வானம் எங்கும் - பெரிய அகன்ற வானம் முழுவதும்; பிறங்கு எரி பிறங்கு மாறும் - விளங்குகின்ற நெருப்புப் பற்றி எரியும் தன்மையையும்; நீரொடு நிலனும் காலும் - நீரும் நிலமும் காற்றும்; நின்றவும் - (ஐம்பூதங்களில் மூன்றை நீக்கி) நின்ற நெருப்பும் வானமும் (ஆகிய ஐம்பூதங்களும்); திரிந்த யாவும் - சரப் பொருள்களாய் உள்ள பிறயாவும்; வேரொடு மடியுமாறும் - அடியோடு அழியும் தன்மையையும்; விண்ணவர் விளியுமாறும் - தேவர்கள் அழியும் தன்மையையும்; காண் என.... (அடுத்த பாடலில் இணையும்). |