வெஞ்சுடர்க் கடவுள் - வெப்பமான கதிர்களை உடைய கதிரவன்; மீண்டு - (அவனது சினத்தில் இருந்து) தப்பி; மேருவில் மறையலுற்றான் - மேரு மலையில் மறையத் தொடங்கினான்; எஞ்சல் இல் - அழிதல் இல்லாத; திசையில் நின்ற யானையும் - திக்குகளில் (நிலை பெற்று) நின்றுள்ள (எட்டு) யானைகளும்; இரியல் போன - அஞ்சி ஓடிப் போயின; உலகம் எல்லாம் துஞ்சின என்பது என் - உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாம் வருத்தம் கொண்டன என்று கூறுவது ஏன்?; துணிந்த நெஞ்சின்- மிக நெஞ்சுரம் கொண்ட; இளைய கோவும் - இலக்குவனும்; அஞ்சினன்- அஞ்சினன் என்றால்; அயல் உளோர்க்கு அவதி உண்டோ - மற்றும் உள்ளோர் கொண்ட அச்சத்துக்கு எல்லை உண்டோ? (இல்லை). கதிரவன் மேரு மலையில் மறைய, திசை யானைகள் அஞ்சி ஓட, மிக்க வலிமையும் மன ஊக்கமும் படைத்த இலக்குவனே அஞ்ச, அயல் உள்ளோர் பேரச்சம் கொள்ள இராமன் பெருஞ்சினம் கொண்டான் என்க. இரியல் - ஓடல். துஞ்சுதல் - அழிதல்; ஈண்டு வருந்துதல். அவதி - துன்பம். 120 இராமன் சீற்றத்தைச் சடாயு தணித்தல் 3523. | இவ் வழி நிகழும் வேலை, எருவைகட்கு இறைவன், 'யாதும், செவ்வியோய்! முனியல்; வாழி! தேவரும் முனிவர்தாமும், வெவ் வலி வீர! நின்னால் வெல்லும் என்று ஏமுற்று உய்வார் எவ் வலி கொண்டு வெல்வார், இராவணன் செயலை?' என்றான். |
இவ்வழி நிகழும் வேலை - இவ்வாறு நடக்கும் பொழுது; எருவை கட்கு இறைவன் - கழுகுகளுக்கு அரசனாகிய சடாயு; செவ்வி யோய் - நன்மைக் குணங்கள் கொண்டவனே!; வாழி - வாழ்வாயாக; யாதும் முனியல் - சிறிதளவு கூடச் சினம் கொள்ளாதே; வெவ்வலிவீர - வெலற்கரு வலி படைத்த வீரனே; தேவரும் முனிவர் தாமும் - தேவர்களும் முனிவர்களும்; நின்னால் வெல்லும் என்று - உன்னைக் கொண்டு (தம் பகைவர்களாகிய அரக்கர்களை) வெல்வோம் என்று (எண்ணிக் கொண்டு); ஏமுற்று உய்வார் - மகிழ்ச்சியுடன் உயிர் வாழ்கிறார்கள்; இராவணன் செயலை - (அப்படிப்பட்டவர்கள்) இராவணன் செய்த கொடுமையான செயலை; எவ்வலி கொண்டு வெல்வார் - எந்த வலிமையைக் கொண்டு (தடுத்து) வெற்றி பெறுவார்கள்; என்றான் - என்று கூறினான். ஏமுற்று - பாதுகாவலால் மகிழ்ந்து நிற்றல், 121 |