பக்கம் எண் :

656ஆரணிய காண்டம்

தழுவி நின்றான் - மனத்தில் (முழுதும்) ஏற்று நின்றவனாய்; இனி அயல்
முனிவது என்னை -
இனிமேல் பிறரைச் சினத்தலால் யாது பயன்?;
அரக்கரை தம் வருக்கம் தீர்க்கும் - அரக்கர்களின் இனத்தை
(முழுதுமாக) அழிக்கும்; செயல் இனிச் செயல் - செயலே இனிச் செய்ய
வேண்டிய செயல்; என்று எண்ணி - என்று மனத்தில் சிந்தித்துப் பார்த்து;
கண்ணிய சீற்றம் தீர்ந்தான் - மனத்தில் தோன்றிய சினத்தை விட்டான்.

     தந்தை சொல் தலை மேற் கொண்ட இராமன், சடாயுவின்
சொற்களைத் தந்தை சொல்லாகவே ஏற்று, அரக்கரை வேரோடு அழித்தலே
செயத்தக்கது எனத் தேர்ந்து சீற்றம் விட்டனன். புயல் - மேகம், பண்பு
குறித்ததாகவும் கொள்ளலாம். அவ்வாறாயின் மேகம் போல் இன்னார்
இனியார் என்னாது அருள் செய்பவன் இராமன் எனக் கொள்க. ஆண்டு -
அப்பொழுது; பணி - கட்டளை அல்லது ஆணை.                  126

வீரச் சடாயுவின் தெய்வ மரணம்

3529. ஆயபின், அமலன் தானும்,
     "ஐய! நீ அமைதி" என்ன
வாயிடை மொழிந்தது அன்றி, மற்று
     ஒரு செயலும் உண்டோ?
போயது அவ் அரக்கன் எங்கே? புகல்'
     என புள்ளின் வேந்தன்
ஓய்வினன்; உணர்வும் தேய,
     உரைத்திலன்; உயிரும் தீர்ந்தான்.

    ஆயபின் - இவ்வாறு சீற்றம் தீர்ந்த பிறகு; அமலன் தானும் - குற்ற
மற்றவனாகிய இராமனும்; ஐய - (சடாயுவைப் பார்த்துத்) தந்தையே; நீ
அமைதி என்ன வாயிடை மொழிந்தது அன்றி -
நீ அமைதியாக இரு
என்று (உன்) வாயால் கூறியபடி அல்லாமல்; மற்று ஒரு செயலும்
உண்டோ -
வேறு நான் செயத்தக்க செயல்கள் ஏதேனும் உளதா (இல்லை
என்றபடி); அவ்வரக்கன் போயது எங்கே புகல் என - அந்த
அரக்கனாகிய இராவணன் சென்றது எங்கே (என்று) கூறுக என்று (கேட்க);
புள்ளின் வேந்தன் - பறவைகளுக்குத் தலைவனாகிய சடாயு; ஓய்வினன் -
தளர்ச்சி உடையவனாய்; உணர்வும் தேய - அறிதலுணர்வும் குறைய;
உரைத்திலன் - (இராமன் கேட்டதற்கு) விடை ஒன்று கூற மாட்டாதவனாய்;
உயிரும் தீர்ந்தான் - உயிரும் விட்டான்.

     'நீ கூறியதை ஏற்றலே என் கடன், அது தவிர வேறு பணி எனக்கு
இல்லை' என்று கூறிய இராமன், 'இராவணன் யாண்டையான்' என
வினவினான்; சடாயு அதற்கு விடை கூறு முன்பே உயிர் விட்டனன்.
ஓய்வினன், உரைத்திலன் - முற்றெச்சங்கள்.                        127