அழகிய நீண்ட கூந்தலை உடைய சீதையை; துறந்தனை தணிதியேனும் - கைவிட்டுச் (சீற்றத்) தணிவு கொள்வாய் என்றாலும்; உந்தையை - உனது தந்தையாகிய சடாயுவை; உயிர் கொண்டானை - உயிர் கொண்டவனாகிய அரக்கனை; உயிருண்ணும் ஊற்றம் இல்லா - உயிர் கொல்லும் மன வலிமை இல்லாத; சிந்தையை ஆகி நின்று - மனத்தை உடையவனாய் நின்று; செய்வது செய்கை என் - செய்யக்கூடிய செயல் எது உள்ளது; இயம்பிற்று என்னை - நீ சொல்லியது என்ன, (அது சரியல்ல); என்றான்- என்று இலக்குவன் கூறினான். சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனை நீ கொல்ல வேண்டும் அவ்வாறன்றி நீ மனம் கலங்கி அவளை முற்றும் துறக்கக் கருதினை எனினும், தந்தையாகிய சடாயுவைக் கொன்ற குற்றத்துக்காகவாவது அவனைக் கொல்ல வேண்டும் என்று இலக்குவன் இராமனிடம் கூறினான். எண்மையன் - எளிய தன்மையன். ஏழை - அறியாமையாகிய பேதமைப் பண்பு உள்ளவள். சந்தம் - அழகு. வார் - நீண்ட. ஊற்றம் - வலிமை. நீ இயம்பிற்று என்னை - 'ஆண்மை தீர்ந்தேன், துறந்தனென், தவம் செய்கேனோ? துறப்பெனோ உயிரை? என் செய்கேன் இளவல்' (3532) என்று மனங் கலங்கிக் கூறியதை உட்கொண்டு உரைத்தது. 132 இருவரும் சடாயுவுக்கு இறுதிக் கடன் செய்தல் 3535. | அவ் வழி இளவல் கூற, அறிவனும் அயர்வு நீங்கி, 'இவ் வழி இனைய எண்ணின் ஏழைமைப்பாலது' என்னா, வெவ் வழி பொழியும் கண்ணீர் விலக்கினன், 'விளிந்த தாதை செவ் வழி உரிமை யாவும் திருத்துவம்; சிறுவ!' என்றான். |
இளவல் - இளவலாகிய இலக்குவன்; அவ்வழி கூற - அவ்வாறு (எடுத்துக்) கூற; அறிவனும் - முற்றுணர்வுடையவனாகிய இராமனும்; இவ்வழி - இவ்விடத்தில்; இனைய எண்ணின் - இத்தன்மையனவான எண்ணங்களை எண்ணுவது; ஏழைமைப் பாலது என்னா - அறியாமையின் பாற்பட்டது என்று எண்ணி; அயர்வு நீங்கி - மனத்துன்பம் நீக்கி; வெவ்வழி பொழியும் கண்ணீர் - கொடுந்துன்பத்தினால் வழியும் கண்ணீரை; விலக்கினன் - துடைத்தவனாய்; சிறுவ - (இலக்குவனை) தம்பி, (என விளித்து); விளிந்த தாதை - இறந்த தந்தையாகிய சடாயுவுக்கு; செவ்வழி உரிமையாவும் - செய்ய வேண்டிய (இறுதிக்) கடமைகளை எல்லாம்; திருத்துவம் - திருத்தமாக (முழுமையுறச்); செய்வோம்; என்றான்- என்று கூறினான். இளவல் கூறியதைக் கேட்ட இராமன் மனம் தேறி, இவ்வாறு சிந்திப்பது அறிவில்லாமையின் பாற்பட்டது என்று உள்ளத்தில் கொண்டு, |