இராமன் சீதையை எண்ணி வருந்துதல் கலிவிருத்தம் 3549. | மடித்த வாயன்; வயங்கும் உயிர்ப்பினன், துடித்து வீங்கி, ஒடுங்குறு தோளினன்; பொடித்த தண் தளிர்ப் பூவொடு மால் கரி ஒடித்த கொம்பு அனையாள் திறத்து உன்னுவான்: |
மடித்த வாயன் - (இராமன்) பிரிவுத் துயராலும், (இராவணன் மேல் கொண்ட) சினத்தாலும், கடித்த உதட்டினை உடையவனாய்; வயங்கும் உயிர்ப்பினன் - வெளிப்பட்டு விளங்குகிற பெருமூச்சை உடையவனாய்; துடித்து வீங்கி ஒடுங்குறு தோளினன் - (மனத் துன்பத்தால்) துடித்து, (இராவணனை அழிக்க வேண்டும் என்பதால்) பூரிப்பு அடைந்து, (செய்வது அறியாமையால்) தளர்ந்த தன்மை அடைந்த தோள்களை உடையவனாய்; மால் கரி ஒடித்த - மதயானை ஒடித்த (இராவணன்); பொடித்த தண் தளிர்ப் பூவொடு - சிறிதாக வெளிப்பட்ட குளிர்ந்த இலைகளையும் பூக்களையும் உடைய; கொம்பு அனையாள் திறத்து - கொம்பினை ஒத்தவளாகிய சீதையின் தன்மை பற்றி; உன்னுவான் - நினைத்தான். சினமும் துயரும், பெருமூச்சும் கொண்ட இராமன், வாய் மடித்து, பெருமூச்சு விட்டு, தோள் துடித்து ஓங்கி ஒடுங்கச் சீதையைப் பற்றி எண்ணத் தொடங்கினான் என்க. மால்கரி - இராவணனுக்கும், கொம்பு - சீதைக்கும், தளிரும் பூவும் - அவளது மேனி நிறத்துக்கும் உவமைகளாம். 9 3550. | ' "வாங்கு வில்லன் வரும், வரும்" என்று, இரு பாங்கும், நீள் நெறி பார்த்தனளோ?' எனும் - வீங்கும் வேலை விரி திரை ஆம் என, ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான். |
வேலை வீங்கும் விரிதிரை ஆம் என - கடலில் மிகுந்து வருகின்ற பரந்த அலைகள் ஆகும் என்று சொல்லும் படியாக; ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான் - மேலும் மேலும் மிகுந்து அடங்குகிற பெருமூச்சினை உடையவனாகிய (இராமன்); வாங்கு வில்லன் வரும் வரும் என்று - |