இதனால் இறைவன் காலங்கடந்தவன் என்பதை விளங்கினார். 'காலமும் கணக்கும் நீத்த காரணன்' (5884) என்றார் பிறாண்டும், அரோ - அசை. 18 3559. | 'வென்றி விற் கை இளவலை! மேல் எலாம் ஒன்று போல உலப்பு இல நாள்கள்தாம் நின்று காண்டி அன்றே? நெடுங் கங்குல்தான் இன்று நீள்வதற்கு ஏது என்?' என்னுமால். |
வென்றி விற்கை இளவலை - வெற்றிக்கு உரிய வில்லைக் கையில் பிடித்த இளையவனாகிய இலக்குவனை (இராமன் பார்த்து); ஒன்று போல உலப்பு இல நாள்கள் - ஒரே மாதிரியாக இயல்பு கெடாது கழிந்த நாள்களை; மேல் எலாம் - முன்பு எல்லாம்; நின்று காண்டி அன்றே - (என்னோடு சேர்ந்து) இருந்து கண்டுள்ளாய் அல்லவா?; நெடுங் கங்குல் இன்று நீள்வதற்கு ஏது என்? - நீண்ட இரவுப் பொழுது இன்று மட்டும் நீண்டிருப்பதாய்த் தோன்றுவதற்குக் காரணம் என்ன?; என்னும் - என்று கேட்கும். 'என்னுடன் உடனிருந்து கழித்த நாட்களில் நீ கண்டுள்ள இரவை விட இன்று மட்டும் இரவு நீள யாது காரணம்?' என்று இராமன் இலக்குவனை வினவினான் என்க. நின்று - இரவு முழுதும் விழித்து நின்று. எலாம் - இடைக்குறை, தாம், தான், ஆல் - அசைகள். 19 3560. | நீண்ட மாலை மதியினை, 'நித்தமும் மீண்டு மீண்டு மெலிந்தனை, வெள்குவாய்; பூண்ட பூணவள் வாள்முகம் போதலால், ஈண்டு, சால விளங்கினை' என்னுமால். |
நீண்ட மாலை மதியினை - (பிரிந்தவர்க்கு) நீண்டதாகத் தோன்றி அமையும் மாலைக் காலத்து அம்புலியை (இராமன் பார்த்து); 'நித்தமும் மீண்டு மீண்டு மெலிந்தனை வெள்குவாய் - (சீதை என்னுடன் இருக்கும் போது) நாள்தோறும் (அவள் முகத்துக்கு ஒப்பு என்ற நினைவுடன்) திரும்பத் திரும்ப வந்து (அவ்வாறு ஒப்பாக மாட்டாமையால்) உடல் மெலிந்தவனாகி வெட்கம் கொண்ட (நீ); பூண்ட பூணவள் வாள் முகம் போதலால் - |