| | மறத் தினார்கள் வலிந்தனர் வாழ்வரேல், அறத்தினால் இனி ஆவது என்?' என்னுமால். |
திறத்து - (தம்) வலிமையினால்; செய்தவத்தோர் இனாதன உற - தவம் செய்யும் முனிவர்கள் பெருந்துன்பம் அடைய; ஒறுத்து - (அவர்களைத்) தண்டித்து; ஞாலத்து உயிர்தமை - உலகத்தில் உள்ள உயிர்களை; உண்டு - (அழித்து) உண்டு; உழல் மறத்தினார்கள் - வாழ்ந்து திரிகிற அறமில்லாதவர்கள்; வலிந்தனர் வாழ்வரேல் - (பெண்களைக் கவர்ந்தும் கூட) வலிமை பெற்று வாழ்வார்களானால்; இனி அறத்தினால் ஆவது என் - இனிமேல் அறத்தினால் ஆகும் பயன் எதுவோ?'; என்னும் - என்று சொல்லுவான். ஆல் - ஈற்றசை. அறத்தவர் வருந்த மறத்தவர் வெற்றி பெற்று மகிழ்வுடன் வாழும் நிலையில் அறத்தினால் விளையும் பயன் யாதோ? என இராமன் வருந்தினான் என்க. திறத்து - வலிமையால், இன்னாதன - துன்பங்கள். 24 | 3565. | தேனின் தெய்வத் திரு நெடு நாண் சிலைப் பூ நின்று எய்யும் பொருகணை வீரனும், மேல் நின்று எய்ய விமலனை நோக்கினான்; தான் நின்று எய்யகில்லான், தடுமாறினான். |
தேனின் தெய்வத் திருநெடு நாண் - வண்டுக் கூட்டங்களாகிய தெய்வத் தன்மை பொருந்திய அழகிய நீண்ட நாணினை உடைய; சிலைப் பூ - கரும்பு வில்லில் மலர் அம்புகளை; நின்று எய்யும் - எதிர் நின்று தொடுக்கின்ற; பொருகணை வீரனும் - போர் செய்கின்ற அம்புகளைக் கையில் கொண்ட வீரனாகிய மன்மதனும்; மேல் எய்ய விமலனை நின்று நோக்கினான் - (இராமன்) மேல் அம்பினை எய்வதற்காகக் குற்றமற்றவனான அவனை உற்றுப் பார்த்தான்; தான் நின்று எய்யகில்லான் தடுமாறினான் - (அவ்வாறு உற்றுப் பார்த்துத்) தான் எதிர் நின்று எய்ய மாட்டாமல் தடுமாற்றமடைந்தான். மன்மதன் இராமன் மீது அம்பு தொடுக்க முயன்று தொடுக்க முடியாமல் தடுமாறினான் என்க. தேன் - வண்டு, மன்மதனுக்குக் கரும்பை வில்லாகவும், மலரை அம்பாகவும், வண்டுக் கூட்டத்தை நாணாகவும் கூறினார் என்க. இப்பாடலில் வரும் முதல் இரண்டு அடிகளில் உள்ள சிலைப் பூ என்பதற்கு மலர் வில் என்று பொருள் கொண்டு மன்மதனுக்குக் கருப்பு வில்லேயன்றிக் காம நூல் என்னும் பூ வில்லும் உண்டு என்று கூறுவதும் உண்டு. 25 |