பக்கம் எண் :

684ஆரணிய காண்டம்

விளையாடி வருகிற பெண் யானையும் மதம் மிக்க ஆண் யானையும்
(ஆகிய இவை); வருவ திரிவ பார்க்கின்றான் - (தன் எதிரே) வந்து
திரிவதை இராமன் பார்க்கின்றான்; குயிலும் - குயிலின் குரலோசையும்;
கரும்பும் - கரும்புச் சாற்று இனிமையும்; செழுந்தேனும் - முற்றிய
தேனின் சுவையும்; குழலும் - குழலின் இசை இனிமையும்; யாழும் -
யாழிசையின் இனிமையும்; கொழும்பாகும் - (முற்றக் காய்ச்சிய)
கொழுமையான சர்க்கரைப் பாகின் சுவையும்; அயிலும் அமுதும் -
(அனைவரும் விரும்பி) உண்ணும் அமுதத்தின் சுவையும்; சுவை தீர்த்த -
(ஆகிய இவற்றின் சுவையையும் இனிமையையும்) தன் குரல் இனிமைக்கு
முன் இனிமையே இல்லை என்று தீர்த்த; மொழியைப் பிரிந்தான் - இனிய
சொல்லை உடைய சீதையைப் பிரிந்தவனாகிய இராமன்; அழியானோ -
வருத்தப்படாமல் இருப்பானோ.

     காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன் என்பது போல்
இணையாக இராமன் முன் திரிந்த மயில், மான், களிறு ஆகியவை அவனது
பிரிவுத் துயரத்தை மிகுவித்தன என்றபடி. கலை - ஆண்மான், பிடி - பெண்
யானை கடகளிறு - மதம் மிக்க ஆண் யானை. மொழி - முதலாகு பெயர்.
சீதையின் பேச்சினிமையைக் கூறும் பகுதியின் சிறப்பை எண்ணுக. குயில்,
கரும்பு, குழல், யாழ் - இனிமையும் சுவையும் குறித்து வந்தன. பண்பாகு
பெயர்கள்.                                                 29

3570.முடி நாட்டிய கோட்டு உதயத்து
     முற்றம் உற்றான் - முது கங்குல்
விடி நாள் கண்டும், கிளி மிழற்றும்
     மென் சொல் கேளா வீரற்கு, 'ஆண்டு,
அடிநாள், செந் தாமரை ஒதுங்கும்
     அன்னம் இலளால், யான் அடைத்த
கடி நாள் கமலத்து' என அவிழ்த்துக்
     காட்டுவான்போல், கதிர் வெய்யோன்.

    கதிர் வெய்யோன் - கதிர்களை உடைய கதிரவன்; முது கங்குல்
விடி நாள் கண்டும் -
நீண்டிருந்த இரவு (முடிந்து தோன்றிய) பகல்
பொழுதைப் பார்த்தும்; கிளி மிழற்றும் மென் சொல்கேளா - கிளி போல்
பேசுகிற (சீதையின்) இனிய சொல்லைக் கேட்காத; வீரற்கு - வீரனாகிய
இராமனுக்கு; ஆண்டு - அப்பொழுது; யான் அடைத்த கடிநாள் கமலத்து
-
(யான்) முதல் நாளில் மூடிய மணம் மிக்க தாமரை மலரில்; அடிநாள்
செந்தாமரை ஒதுங்கும் அன்னம் -
முற்காலத்துத் தாமரை மலரில்
தோன்றிய அன்னப் பறவை போன்ற சீதை; இலன் - (இப்போது என்னிடம்)
இல்லை; என - என்று; அவிழ்த்துக் காட்டுவான் போல் - விரித்துக்
காட்டுபவன் போல்; முடி நாட்டிய கோட்டு உதயத்து - முடி நாட்டியது
போல் அமைந்த உச்சியை உடைய உதய கிரியில்; முற்றம் உற்றான் -
முழுமையாக விளங்கித் தோன்றினான். ஆல் - ஈற்றசை.