பக்கம் எண் :

அயோமுகிப் படலம் 687

உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்க,
புள் படியும் குளிர் வார் பொழில் புக்கார்.

    மண்படி செய்த தவத்தினில் - (அவர்கள்) மண்ணுலகு செய்த
தவத்தினால்; வந்த - (அதனிடமிருந்து) வந்த; கள் படி கோதையை -
தேன் பொருந்திய மாலையை அணிந்த சீதையை; நாடினர் காணார் -
தேடிக் காணாதவர்களாகி; உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்க -
மனத்தில் படிந்திருந்த சினம் பெருமூச்சோடு (பொங்கி) வெளிப்பட; புள்
படியும் குளிர் வார் பொழில் -
பறவைகள் தங்குகிற குளிர் (மிகுந்த)
பெரிய சோலையின் கண்; புக்கார் - புகுந்தார்கள்.

     இராமலக்குவர் சீதையைத் தேடிக் காணாமல் சினமும் பெருமூச்சும்
வெளிப்பட ஒரு சோலைக் கண் சென்று தங்கினர் என்பதாம். மண் படி -
மண்ணுலகு. வார் - நீண்ட, பெரிய. காணார் - முற்றெச்சம்.          34

3575. ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான்;
நாரியை எங்கணும் நாடினன்; நாடி,
பேர் உலகு எங்கும் உழன்று, இருள் பின்னா,
மேருவின் - வெங் கதிர் - மீள மறைந்தான்.

    வெங்கதிர் - வெப்பமான கதிர்களை உடைய கதிரவன்; ஆரியர்
சிந்தை அலக்கண் அறிந்தான் -
வீரர்களாகிய (அந்த) இராமலக்குவரது
மனத் துன்பத்தை அறிந்து; நாரியை எங்கணும் நாடினன் நாடி -
பெண்ணாகிய சீதையை எங்கும் (துருவித்) தேடிப் பார்த்து; பேர்உலகு
எங்கும் உழன்று -
(இந்தப்) பெரிய நிலவுலகு முழுவதும் அலைந்து
திரிந்து; மேருவின் மீள இருள் பின்னா மறைந்தான் - மேரு மலையில்
மறுபடியும் தனக்குப் பின் இருள் தொடரும் படி சென்று மறைந்தான்.

     உலகம் முழுதும் சீதையை தேடி அலுத்த கதிரவன் உலகுக்கு
அப்புறம் போயும் தேடுவான் போலத் தனக்குப் பின் இருள் தொடருமாறு
மேரு மலையில் மறைந்தான். ஆரியர் - வீரர், அறிவுடையவர், பெரியோர்
எனினுமாம். அலக்கண் - துன்பம், நாரி - பெண்; ஈண்டுச் சீதை. அறிந்தான்
- முற்றெச்சம். வெங்கதிர் - பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித் தொகை.                                         35

3576. அரண்டு, அருகும் செறி அஞ்சன புஞ்சம்
முரண்டனபோல், இருள் எங்கணும் முந்த,
தெருண்ட அறிவில்லவர் சிந்தையின் முந்தி,
இருண்டன, மாதிரம் எட்டும் இரண்டும்.

    செறி அஞ்சன புஞ்சம் - அடர்ந்த மையின் திரட்சி; அரண்டு -
அஞ்சி; அருகும் முரண்டன போல் - (இரு) பக்கங்களிலும் வளைத்துக்
கொண்டன போல; எங்கணும் இருள் முந்த - எல்லாப் பக்கங்களிலும்
இருள் சூழ; தெருண்ட அறிவில்லவர் - தெளிவில்லாத
அறிவில்லாதவர்களுடைய;