பக்கம் எண் :

அயோமுகிப் படலம் 691

விரைந்து எதிர் வந்தனள்,
     தீயினும் வெய்யாள்!.

    தீயினும் வெய்யாள் - தீயினைக் காட்டிலும் கொடியவள் ஆகிய
அயோமுகி; இரந்தனென் எய்திய போது - (நான் இவனை) வேண்டி
நெருங்கும் போது; இசையாது நனிகரந்தனனேல் - (என் விருப்பத்துக்கு)
இசையாமல் முழுதும் மறுத்து விடுவானாகில்; கொண்டு கடந்து -
(அவனை) எடுத்துக் கொண்டு கடந்து சென்று; என் முரஞ்சினில் மேவி -
எனது குகைக்குக் கொண்டு சென்று; முயங்குவென் என்று - (அவனை)
வலியத் தழுவுவேன் என்று சொல்லி; எதிர் விரைந்து வந்தனள் -
(இலக்குவனுக்கு) எதிராக விரைந்து வந்தாள்.

     என் ஆசைக்கு இணங்கா விட்டால் நான் அவனை வலியத் தூக்கிச்
சென்று என் குகையில் வைத்து வலியத் தழுவுவேன்' என்று அயோமுகி
எண்ணினாள். முரஞ்சு - பாறை, இங்கு மலை முழைஞ்சாகிய பாறையைச்
சுட்டியது. ஆகு பெயர். இரந்தனன் - முற்றெச்சம்.                  42

அயோமுகியின் தன்மை

3583. உயிர்ப்பின் நெருப்பு
     உமிழ்கின்றனள்; ஒன்ற
எயிற்றின் மலைக் குலம்
     மென்று இனிது உண்ணும்
வயிற்றள்; வயக் கொடு
     மாசுணம் வீசு
கயிற்றின் அசைத்த
     முலை, குழி கண்ணாள்;

    உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள் - (தன்) பெருமூச்சில்
நெருப்பை வெளிக் காலுபவளும்; எயிற்றின் - பற்களால்; ஒன்ற -
ஒன்றாக; மலைக்குலம் - யானைக் கூட்டங்களை; மென்று இனிது
உண்ணும் -
கடித்து மென்று இனிமையாக உண்ணுகின்ற; வயிற்றள் -
வயிற்றினை உடையவளும்; வயக்கொடு மாசுணம் வீசு கயிற்றின் -
வலிமையான கொடிய பாம்புகள் ஆகிய நீண்ட கயிற்றினால்; அசைத்த
முலை -
சேர்த்துக் கட்டிய முலைகளையும்; குழிகண்ணாள் - குழி
விழுந்த கண்களையும் உடையவளும் ........ (தொடர்ச்சி அடுத்த பாடலில்).

     அயோமுகியின் பெருமூச்சு, வயிறு, முலை, கண் ஆகியவை பற்றி
இப்பாடலில் கூறப்பட்டன.. மலை - யானை. மாசுணம் - பெரும் பாம்பு.
மலை - யானைக்கு உவமையாகு பெயர். மலைக்குலம் - இருபெயரொட்டுப்
பண்புத் தொகை. வய - வலியென்னும் பொருள் தரும் உரிச் சொல்.    43