பக்கம் எண் :

696ஆரணிய காண்டம்

யாவள் அடீ? உரைசெய்,
     கடிது' என்றான்.

    பண்பு இலர் - நற்பண்புகள் இல்லாதவரும்; பாவியர் ஆம் இவர் -
பாவியர்களும் ஆகிய இவர்கள்; நம்பால் - நம்மிடம்; மேவிய காரணம்
வேறு இலை -
வருவதற்கு உரிய காரணம் வேறு ஒன்றும் இல்லை;
என்பான் - என்று நினைத்தவனாகிய (இலக்குவன்); மா இயல் கானின் -
விலங்குகள் திரிகின்ற காட்டின்கண்; வயங்கு இருள் வந்தாய் - மிக்க
இருளில் வந்தவளாகிய (நீ); யாவள் அடீ - யாரடி; உரை செய்கடிது -
விடையை விரைவாகச் சொல்; என்றான் - என்று கேட்டான்.

     நற்குணமில்லாத கொடியவர்களாகிய அரக்கியர் நம்மிடம் வருவதற்கு
வேறு காரணம் இல்லை என்றது பாவம் செய்தலாகிய ஒரு காரணம்
உள்ளது எனக் கருதியதாகும். வந்தாய் - முன்னிலை ஒருமை
வினையாலணையும் பெயர்; 'வந்தவளே' என விளியாகவும் கொள்ளலாம்.  51

அயோமுகியின் காம வெறியும் இலக்குவன் மறுப்பும்

3592.பேசினன்; அங்கு அவள்
     பேசுற நாணாள்;
ஊசல் உழன்று அழி
     சிந்தையளும்தான்,
'நேசம் இல்,
     அன்பினளாயினும், நின்பால்
ஆசையின் வந்த
     அயோமுகி' என்றாள்.

    பேசினன் - (மேலே குறிப்பிட்டவாறு இலக்குவன்) பேசினான்; அங்கு-
அப்பொழுது; ஊசல் உழன்று அழி சிந்தையளும் தான் அவள் -
ஊசலாடி வருந்தி அழிகின்ற மனத்தை உடையவளாகிய அயோமுகியும்
தான்; பேசுற நாணாள் - தன் ஆசையை ஆண்மகனிடம் தானே எடுத்துச்
சொல்ல நாணமடையாதவளாய்; நேசம் இல் அன்பினளாயினும் - பழைய
உறவு இல்லாத அன்பு உடையவள் ஆயினும்; நின்பால் - நின்னிடம்;
ஆசையின் வந்த அயோமுகி - ஆசையால் வந்த அயோமுகி என்ற
பெயர் உடையவள்; என்றாள் - என்று கூறினாள்.

     ஊசல் உழன்று அழி சிந்தையள் இலக்குவன் தன்னை ஏற்பானோ
மாட்டானோ என்று தடுமாறும் உள்ளம் கொண்டவள். பேசுற நாணாள் -
தாமுறு காமத் தன்மை தாங்களே ஆடவனிடம் உரைக்க நாணாதவள்.
மூன்றாவது அடிக்கு வேறு பாடங்களும் உள; எனினும், நாம் கொண்ட
பாடம் உட்பட எதற்கும் முற்றும் பொருந்துறப் பொருள் கொள்ள
இயலவில்லை. ஏடேழுதியோர் பிழையோ, பொருள் கொள்ள நம்பால் உள்ள
குறையோ - தெரியவில்லை. தான் - அசையாகவும் கொள்ளலாம்.       52