பக்கம் எண் :

அயோமுகிப் படலம் 697

3593.பின்னும் உரைப்பவள், 'பேர்
     எழில் வீரா!
முன்னம் ஒருத்தர் தொடா
     முலையோடு உன்
பொன்னின் மணித் தட மார்பு
     புணர்ந்து, என்
இன் உயிரைக் கடிது
     ஈகுதி' என்றாள்.

    பின்னும் உரைப்பவள் - மேலும் தொடர்ந்து கூறுபவளாகிய
(அயோமுகி); 'பேர் எழில் வீரா - பேரழகுடைய வீரனே; முன்னம்
ஒருத்தர் தொடா முலையோடு -
இதற்கு முன்பு ஒருவரும் தொடாத
முலையோடு (கன்னி என்றபடி); உன் பொன்னின் மணித்தட மார்பு
புணர்ந்து -
உன்னுடைய பொன் போன்ற அழகிய பெரிய மார்பைத் தழுவி;
என் இன் உயிரைக் கடிது ஈகுதி - அதனால் எனது இனிமையான, உயிர்
(போகாது இருக்க) விரைவாக அருள் ஈவாய்; என்றாள் - என்று கூறினாள்.

     'நான் பிறரோடு புணர்ந்தவளல்லள், உன்னை மட்டும் விரும்புபவள்.
எனவே என்னைப் புணர்ந்து என் இன்னுயிர் ஈவாய்' என்றாள். ஈகுதி -
இழிந்தோள் கூற்றாக வந்தது. உரைப்பவள் - முற்றெச்சம், தொடா -
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். தடமார்பு - உரிச் சொல் தொடர்.
ஈகுதி - முன்னிலை ஒருமை வினைமுற்று.                          53

3594. ஆறிய சிந்தையள்
     அஃது உரைசெய்ய,
சீறிய கோளரி
     கண்கள் சிவந்தான்;
'மாறு இல வார் கணை, இவ்
     உரை வாயின்
கூறிடின், நின் உடல்
     கூறிடும்' என்றான்.

    ஆறிய சிந்தையள் - (இலக்குவன் மீது கொண்ட காதலால்)
கொடுமை குறைந்த மனம் உடையவளாகிய (அயோமுகி); அஃது உரை
செய்ய -
அந்தச் சொற்களைச் சொல்ல; சீறிய கோளரி - சினம் கொண்ட
சிங்கம் போன்ற இலக்குவன்; கண்கள் சிவந்தான் - சினத்தால் கண்கள்
சிவந்து; 'இவ்வுரை வாயின் கூறிடின் - இப்படிப்பட்ட சொற்களை (நீ
மீண்டும்) வாயினால் கூறினால்; மாறு இலவார் கணை - (எனது) ஒப்பு
இல்லாத நீண்ட அம்புகள்; நின் உடல் கூறிடும் - உனது உடலைத் துண்டு
துண்டாக்கி விடும்'; என்றான் - என்று கூறினான்.