நீ மீண்டும் இவ்வாறு கூறினால் என் அம்பு உன் உடலைக் கூறிடும் என்றவாறு. கோளரி - உவமையாகு பெயர். கோளரி சிவந்தான் - திணை வழுவமைதி. பாடலின் இறுதி வரியில் உள்ள சொல் நயம் காண்க. 54 3595. | மற்று அவன் அவ் உரை செப்ப, மனத்தால் செற்றிலள்; கைத் துணை சென்னியில் வைத்தாள்; 'கொற்றவ! நீ எனை வந்து உயிர் கொள்ளப் பெற்றிடின், இன்று பிறந்தனென்' என்றாள். |
அவன் மற்று அவ் உரை செப்ப - அந்த இலக்குவன் மாறுபாடாக இந்தச் சொற்களைச் சொல்ல; மனத்தால் செற்றிலள் - மனத்தால் சினம் கொள்ளாதவளாகிய (அயோமுகி); கைத் துணை சென்னியில் வைத்தாள் - தன் இரண்டு கைகளையும் தலைமீது குவித்தவளாய்; 'கொற்றவ - தலைவனே; நீ எனை வந்து - நீ என்னிடம் வந்து; உயிர் கொள்ளப் பெற்றிடின் - (நான்) உயிர் பெற்று வாழும்படி செய்யப் பெற்றால்; இன்று பிறந்தனென் - இன்று நான் (மீண்டும்) பிறந்ததன் பயனைப் பெற்றவளாவேன்'; என்றாள் - என்று கூறினாள். இலக்குவன் கூறியதைக் கேட்ட அயோமுகி சினம் கொள்ளாது அவனைக் கை கூப்பி வணங்கி 'நீ எனக்கு அருள் செய்யின் நான் பிறந்த பயனைப் பெற்றவள் ஆவேன்' என்றாள். 55 3596. | வெங் கதம் இல்லவள் பின்னரும், 'மேலோய்! இங்கு நறும் புனல் நாடுதி என்னின், அங்கையினால் எனை, "அஞ்சலை" என்றால், கங்கையின் நீர் கொணர்வென் கடிது' என்றாள். |
வெங்கதம் இல்லவள் - கொடிய சினம் இல்லாதவளாகிய (அயோமுகி); பின்னரும் - பின்பும்; 'மேலோய் - உயர்ந்தவனே!; இங்கு நறும் புனல் நாடுதி என்னின் - இவ்விடத்தில் நல்ல நீரைத் தேடுகிறாய் என்றால்; எனை - எனக்கு; அங்கையினால் - உன்னுடைய அழகான கைகளினால்; "அஞ்சலை" என்றால் - அஞ்சாதே என்று அபயம் அளித்தால்; கடிது - விரைவாக; |