பக்கம் எண் :

700ஆரணிய காண்டம்

வைத்து; இவன் வெம்மை அகற்றிய பின்னை - இவனது சினத்தைத்
தணித்த பின்பு; உடற்படுமால் - (இவன் என் எண்ணத்துக்கு)
உடன்படுவான்; உடனே நன்மை உறும் - (அதற்குப் பின்பு) விரைவாக
(இவனால்) எனக்கு நல்ல மகிழ்ச்சி கிடைக்கும்; இதுவே திடத்து நலன் -
இவ்வாறு செய்வதுவே உறுதியாக நன்மை தரும்; என்று - என்று எண்ணி;
அயல் சென்றாள் - (இலக்குவனது) அருகில் சென்றாள்.

     இவனை என் குகைக்கு எடுத்துச் சென்று சினத்தைத் தணித்தால்,
இவன் எனக்கு உடன்படுவான். அதுவே உறுதியாகச் செய்யத் தக்கது என்று
எண்ணிய அயோமுகி இலக்குவனுக்குப் பக்கத்தில் போனாள். முழை -
குகை, வெம்மை - வெப்பம், ஈண்டுச் சினம். திடம் - உறுதி, எடுத்தனென் -
முற்றெச்சம். ஆல் - அசை.                                     58

இலக்குவனை அயோமுகி தூக்கி்ச் செல்லல்

3599.மோகனை என்பது
     முந்தி முயன்றாள்;
மாக நெடுங் கிரி
     போலியை வவ்வா
ஏகினள் - உம்பரின்
     இந்துவொடு ஏகும்
மேகம் எனும்படி -
     நொய்தினின் வெய்யாள்.

    வெய்யாள் - கொடியவளாகிய அயோமுகி; மோகனை என்பது -
மோகத்தை உண்டாக்கும் மாயையை; முந்தி முயன்றாள் - முன்னால்
முயன்று செய்து; மாக நெடுங்கிரி போலியை வவ்வா - விண்ணை
அளாவிய பெரிய மலை போன்றவனாகிய இலக்குவனைத் தூக்கிக் கொண்டு;
உம்பரின் - மேலே உள்ள வானத்தில்; இந்துவொடு ஏகும் மேகம்
எனும்படி -
நிலவுடன் சேர்ந்து செல்லுகிற மேகம் என்று சொல்லும்
படியாக; நொய்தினின் - (மிக) விரைவாக; ஏகினள் - சென்றாள்.

     அயோமுகி மோகனை என்ற மாய மந்திரத்தால் இலக்குவனை மயக்கி,
அவனை எடுத்துக் கொண்டு, நிலவுடன் சேர்ந்து செல்லுகிற மேகம் போல
வானத்தில் விரைந்து சென்றாள். மோகனை - மோகத்தை உண்டாக்கும்
மாயை. மாகம் - வானம். இந்து - நிலவு. நொய்தினின் - எளிமையாக
எனினுமாம். "நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன்" (5) எனக் கம்பர்
கூறியுள்ளதை எண்ணுக. இந்து - இலக்குவனுக்கும் மேகம் -
அயோமுகிக்கும் உவமையாம். ஒளி அறத்துக்கும், கருமை பாவத்துக்கும்
இங்கு வந்துள்ளமை காண்க. வவ்வா - செய்யா எனும் வாய்பாட்டு உடன்
பாட்டு வினையெச்சம்.                                        59

3600. மந்தரம் வேலையில் வந்ததும், வானத்து
இந்திரன் ஊர் பிடி என்னலும், ஆனாள்;