| வெந் திறல் வேல் கொடு சூர் அடும் வீரச் சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள். |
மந்தரம் வேலையில் வந்ததும் - (இலக்குவனைத் தூக்கிச் சென்ற அயோமுகி) மந்தரமலை கடலில் பொருந்தியது போலவும்; வானத்து இந்திரன் ஊர்பிடி - தேவர் உலகத்தில் இந்திரன் ஏறிச் செலுத்தும் (ஐராவதம் என்ற ஆண் யானையின் துணையாகிய) அப்பிரமு என்ற பெண் யானை; என்னலும் ஆனாள் - என்று உவமை கூறத்தக்கவளாய் விளங்கினாள்; வெந்திறல் வேல் கொடு சூர் அடும் - (அதற்கு மேல் தன்) வலிமை பொருந்திய வேலைக் கொண்டு சூரபதுமனைக் கொன்ற; வீரச் சுந்தரன் ஊர்தரு தோகையும் - வீர அழகனாகிய முருகக் கடவுள் ஏறிச் செலுத்துகிற மயிலையும்; ஒத்தாள் - ஒத்து விளங்கினாள். இலக்குவனை அயோமுகி தூக்கிச் சென்ற காட்சியை இப்பாடலில் மூன்று உவமைகள் கொண்டு விளக்கினார் (1) மந்தரமலை - இலக்குவன், கடல் - மந்தர மலையைத் தாங்கிய கடல் அயோமுகி. இஃது இல் பொருள் உவமை. (2) இந்திரன்; இலக்குவன், அவன் ஊர்பிடி - அப்பிரமு: அயோமுகி. அயோமுகி பெண் என்பதால் இந்திரன் ஊரும் ஐராவதம் என்ற ஆண் யானையைக் கூறாது அதன் துணையாகிய பெண் யானையைக் கூறினார். (3) முருகன் : இலக்குவன். முருகனைத் தாங்கும் தோகை; அயோமுகி. இங்குப் பெண் மயில் கூறாது தோகையுடைய ஆண் மயிலைக் கூறியது, முருகனைச் சுமக்கும் மயிலைக் கருதியதால் என்க. இம்மூன்று உவமைக்கும், "தாங்குதல்" என்பது பொதுத் தன்மையாதலையும் அறிக. வேலை - கடல், சூர் - சூரபதுமன், சுந்தரன் - முருகன். 60 3601. | ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கி, பூங் கழல் வார் சிலை மீளி பொலிந்தான்; வீங்கிய வெஞ்சின வீழ் மத வெம் போர் ஓங்கல் உரிக்குள் உருத்திரன் ஒத்தான். |
ஆங்கு - அந்த நிலையில்; அவள் மார்பொடு கையின் அடங்கி - அவளது மார்பின் கண்ணும் கையின் கண்ணும் அடங்கி; பூங்கழல் வார் சிலை மீளி - அழகிய வீரக்கழலை அணிந்த நீண்ட வில்லை ஏந்திய வீரனாகிய (இலக்குவன்); பொலிந்தான் - அழகு பெற விளங்கினான்; வீங்கிய வெஞ்சின - மிகக் கொடிய சினத்தினையும்; வீழ் மத - வடிகின்ற மதத்தினையும்; வெம்போர் - கொடிய போரினையும் செய்கிற; ஓங்கல் - யானையினது; உரிக்குள் - உரித்த தோலுக்குள் இருந்து காட்சியளிக்கும்; உருத்திரன் ஒத்தான் - சிவ பிரானை ஒத்து விளங்கினான். |