பக்கம் எண் :

அயோமுகிப் படலம் 703

     நொய்தாய் வர - (இலக்குவன்) விரைவாய் வருவதற்கு;
வேகமும் நொய்திலனால் - விரைவும் குறைவாக உடையவனல்லன்;
எய்தாது ஒழியான் - வராமல் இருக்கவும் மாட்டான்; வெய்து
ஆகிய கானிடை மேவரும் நீர் ஐது ஆதலினோ? -
(அப்படி
இருந்தும் அவன் வாராமைக்குக் காரணம்) வெப்பம் உடைய காட்டில்
பொருந்தி உள்ள தண்ணீர் கிடைக்க அருமையானதா? (அல்லது);
அயல் ஒன்று உளதோ - வேறு ஏதாவது ஒன்று நேர்ந்து
விட்டதோ?; இது என்னை கொலாம் - இவ்வாறு ஆனதற்கு என்ன
காரணமோ?

     எண்ணிய கருமம் முடித்து வேகமாக வந்து சேரும் இயல்புள்ள
இலக்குவன் காட்டில் நீர் கிடைக்காமையாலோ, வேறு ஏதோ
ஏற்பட்டோ இன்னும் வந்து சேரவில்லை போலும் என இராமன்
எண்ணினான். வெய்து - வெப்பம். மேவுதல் பொருந்தல், ஐது -
அரிது. உண்மை எனினுமாம். ஈண்டு இன்மை குறித்தது. நொய்தாய் -
விரைவாய், ஆல், ஆம் - அசைகள், கொல் - ஐயப்பொருள்
தருவதோர் இடைச்சொல்.                                      63

3604.' "நீர் கண்டனை இவ்
     வழி நேடினை போய்,
சார், கொண்டு" என,
     இத்துணை சார்கிலனால்;
வார் கொண்டு அணி
     கொங்கையை வவ்வினர்பால்
போர் கொண்டனனோ? பொருள்
     உண்டு இது' எனா,

    இவ்வழி நேடினைபோய் - இந்த வழியில் தேடிப்போய்; நீர்
கண்டனை கொண்டு சார் -
தண்ணீரைக் கொண்டு வருக; என -
என்று நான் கூற; இத்துணை சார்கிலனால் - (அதனை ஏற்றுச்
சென்ற இலக்குவன்) இவ்வளவு நேரம் கடந்தும் வந்து சேரவில்லை;
வார்கொண்டு அணி கொங்கையை - கச்சினைக் கொண்டு (அழகு
பெற) அணிந்துள்ள முலைகளை உடைய சீதையை; வவ்வினர் பால் -
கவர்ந்து சென்ற அரக்கர்களுடன்; போர்கொண்டனனோ - போர்
செய்யத் தொடங்கி விட்டானோ; பொருள் உண்டு இது எனா -
இந்த தாமதத்திற்கு ஏதோ அர்த்தம் உண்டு என்று....

     நான் நீரைத் தேடிக் கொணர்க என்று சொன்னதை ஏற்றுச்
சென்ற இலக்குவன் இன்னும் வரவில்லை. ஒருகால் சீதையைக்
கவர்ந்து சென்ற அரக்கர்களைக் கண்டு அவர்களுடன் போரிட
நேர்ந்து விட்டதோ என இராமன் எண்ணினான். இப்படி ஏதேனும்
காரணமின்றி இலக்குவன் தாமதியான் என்பது இராமன் நினைப்பு.
நேடி - தேடி. வார் - கச்சு. பொருள் - பயன். கண்டனை, 'நேடினை
- முற்றெச்சங்கள், ஆல் - அசை. இப்பாடல் முதல் 3614 முடிய ஒரு
தொடர். 3615 ஆம் பாடலின் 'என்னா உரையா' என்ற எச்சத் தொடர்
கொண்டு இப்பாடல் முடியும்.                                   64