பக்கம் எண் :

704ஆரணிய காண்டம்

3605.'அம் சொல் கிளி அன்ன
     அணங்கினை முன்
வஞ்சித்த இராவணன்
     வவ்வினனோ?
நஞ்சின் கொடியான்
     நடலைத் தொழிலால்,
துஞ்சுற்றனனோ,
     விதியின் துணிவால்?

    அம் சொல் கிளி அன்ன அணங்கினை - அழகு மொழி
பேசும் கிளி போன்ற அழகிய சீதையை; முன் வஞ்சித்த இராவணன்
வவ்வினனோ -
முன்னாளில் வஞ்சனையால் கவர்ந்து சென்ற
இராவணன் (இப்போது இவனையும்) கவர்ந்து சென்றனனோ?; நஞ்சின்
கொடியான் நடலைத் தொழிலால் -
நஞ்சினைக் காட்டிலும்
கொடியவனான இராவணனது வஞ்சனைத் தொழிலால்; விதியின்
துணிவால் -
ஊழ் வினையின் வலிமையால்; துஞ்சுற்றனனோ? -
இறந்துபட்டானோ?

     வஞ்சனையால் கவரும் இராவணன் கொடுமை தொடர்கிறதோ
என்பது இராமன் கொண்ட ஐயத் தடுமாற்றம். விதிக்கும் விதியாகும்
விற்றொழில் வல்லவனாகிய இலக்குவனையும் விதி வென்றதால்
இறந்திருப்பானோ என்ற அளவுக்கும் பெருமான் தடுமாறுகிறான்.
அணங்கு - பெண்களிற் சிறந்தவள். நடலை - வஞ்சனை.
துஞ்சுற்றனன் - தகுதி வழக்கில் மங்கல வழக்கு என்க. தொழிலால்,
துணிவால் - ஆல் கருவிப் பொருளில் வந்தது.                      65

3606.'வரி விற் கை என் ஆர்
     உயிர் வந்திலனால்;
"தரு சொல் கருதேன்; ஒரு
     தையலை யான்
பிரிவுற்றனென்" என்பது
     ஒர் பீழை பெருத்து
எரிவித்திட, ஆவி
     இழந்தனனோ?

    வரிவிற்கை என் ஆர் உயிர் வந்திலனால் - கட்டமைந்த
வில்லைக் கையில் ஏந்திய என் அருமையான உயிர் போன்ற தம்பி
வரவில்லை; தருசொல் கருதேன் - (தான் எனக்குச்) சொன்ன
சொற்களை எண்ணிக் கருதாமல்; யான் ஒரு தையலை - நான்
ஒப்பற்ற பெண்ணாகிய சீதையை; பிரிவுற்றனென் - பிரியப் பெற்றேன்;
என்பது ஒர் பீழை - என்ற ஒப்பற்ற பெருந்துன்பம்; பெருத்து
எரிவித்திட -
மிகுந்து தன்னை வாட்டி வருத்தியதால்; ஆவி
இழந்தனனோ -
உயிரை விட்டு விட்டானோ.