பக்கம் எண் :

அயோமுகிப் படலம் 721

3632.'தொல் இருள், தனைக்
     கொலத் தொடர்கின்றாளையும்,
கொல்லலை; நாசியைக்
     கொய்து நீக்கினாய்;
வல்லை நீ; மனு முதல்
     மரபினோய்!' என,
புல்லினன் - உவகையின்
     பொருமி விம்முவான்.

    உவகையின் பொருமி விம்முவான் - மகிழ்ச்சியால் உடல்
பூரித்து விம்மலுற்றவனாகிய (இராமன்); தொல் இருள் - முதிர்ந்த
இருட்டில்; தனை - உன்னை; கொலத் தொடர்கின்றாளையும் -
கொல்லத் தொடர்ந்து வந்த அரக்கியையும்; நீ - நீ; கொல்லலை -
கொல்லாமல்; நாசியைக் கொய்து நீக்கினாய் - மூக்கையும் (பிற
உறுப்புகளையும்) அறுத்து நீக்கி விட்டாய்; மனு முதல் மரபினோய் -
மனுவை முதலாகக் கொண்ட மரபு வழி வந்தவனே!; வல்லை நீ -
(இச் செயல் மரபுக் கேற்ற) வன்மை உடையவன் நீ; என - என்று
இராமன் கூறி; புல்லினன் - இலக்குவனைத் தழுவினான்.

     பெண் கொலை செய்யாது அவளைத் தம்பி தண்டித்ததை
அறிந்த இராமன், "மனு முதல் மரபினோய் வல்லை" என்று கூறிப்
புல்லினன் என்க. தொல் இருள் - முதிர்ந்த இருள். தனை - உன்னை.
மனு முதல் மரபு - மனு, கதிரவனின் மகன். இவனை முதலாகக்
கொண்டே சூரிய குலத்தரசர்கள் மனு முதல் நெறியினோர்
எனப்பட்டனர். இவனே குல முதல்வன் என்க. இவன் வைவ சுவதமனு
எனப்படுவான். கொல் - இடைக்குறை. தொடர்கின்றாளை -
வினையாலணையும் பெயர்; காலவழுவமைதியும் ஆகும்; இங்கு இறந்த
காலம் நிகழ்காலமாகச் சுட்டப்பட்டுள்ளமை அறிக.                  92

இராமன் வருண மந்திரத்தால் வான நீர் பருகி, ஒரு மலையில்
தங்குதல்

3633.பேர அருந் துயர் அறப்
     பேர்ந்துளோர் என,
வீரனும் தம்பியும்
     விடிவு நோக்குவார்,
வாருணம் நினைந்தனர்; வான
     நீர் உண்டு,
தாரணி தாங்கிய
     கிரியில் தங்கினார்.

    வீரனும் - வீரனாகிய இராமனும்; தம்பியும் - தம்பியாகிய
இலக்குவனும்; பேர அருந்துயர் - நீக்க முடியாத பெருந்துன்பத்தை;
அறப் பேர்ந்துளோர் என - முழுதும் நீக்கியவர் என்னுமாறு
(அரக்கியால் ஏற்பட்ட