பக்கம் எண் :

722ஆரணிய காண்டம்

துன்பத்தை நீக்கி); வாருணம் நினைந்தனர் - வருண மந்திரத்தை
எண்ணினர்; வான நீர் உண்டு - (அதனால்) வானத்தில் இருந்து
கிடைத்த நீரைப் பருகி; விடிவு நோக்குவார் - பொழுது விடியும்
காலத்தை எதிர் நோக்கியவர்களாய்; தாரணி தாங்கிய - நிலத்தைத்
தாங்கிக் கொண்டுள்ள; கிரியில் தங்கினார் - ஒரு பெரிய மலையில்
தங்கி இருந்தார்கள்.

     இராமனும் தம்பியும் நீக்க முடியாத துன்பத்திலிருந்து
விடுபட்டவர்களாகி, வருண மந்திரம் சொல்லி அதனால் கிடைத்த
வான நீரைப் பருகிப் பொழுது விடியும் காலத்தை எதிர்நோக்கி ஒரு
பெரிய மலையில் தங்கி இருந்தனர். பேரஅரும் - நீக்குதற்கு அரிய.
அற - முழுமையாக. வாருணம் - வருண மந்திரம். அருந்துயர் -
பண்புத்தொகை, பேர்ந்துளோர் - வினையாலணையும் பெயர்.
நோக்குவார் - முற்றெச்சம். வானநீர் - ஐந்தாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்க தொகை.                                93

3634. கல் அகல் வெள்ளிடை,
     கானின் நுண் மணல்,
பல்லவம், மலர், கொடு
     படுத்த பாயலின்,
எல்லை இல் துயரினோடு
     இருந்து சாய்ந்தனன்,
மெல் அடி, இளையவன்
     வருட, வீரனே.

    வீரன் - வீரனாகிய இராமன்; கல் அகல் வெள்ளிடை -
கற்கள் பரந்துள்ள வெளியிடத்தில்; கானின் நுண்மணல் - காட்டில்
உள்ள நொய்மையான மணல்; பல்லவம் - தளிர்கள்; மலர்கொடு -
(மற்றும்) மலர்கள் (ஆகியவை கொண்டு இலக்குவன்); படுத்த
பாயலின் -
அமைத்த படுக்கையில்; எல்லை இல் துயரினோடு
இருந்து -
அளவற்ற பெருந்துன்பத்தோடு இருந்து; மெல் அடி -
(தனது) மென்மையான பாதங்களை; இளையவன் வருட -
இளையவன் ஆகிய இலக்குவன் மெதுவாகத் தடவ; சாய்ந்தனன் -
பள்ளி கொண்டான். ஏ - ஈற்றசை.

     இராமன் வெட்ட வெளியில் மணல், தளிர்கள், மலர்கள்
ஆகியவற்றைக் கொண்டு இலக்குவன் அமைத்த படுக்கையில், அவன்
மெத்தெனத் திருவடி வருடப் பள்ளி கொண்டான். வெள்ளிடை -
மேல் மறைவில்லாத இடம், வெட்ட வெளி என்ப. பல்லவம் - தளிர்.
படுத்த - அமைத்த. பரமனுக்குப் பாகவதன் செய்யும் கைங்கர்யத்தை
ஈற்றடியால் கூறினார். இதில் உடன்பிறப்புப் பாசம் நிறைந்து
உள்ளமையையும் எண்ணுக. கொடு - இடைக்குறை. மெல் அடி -
பண்புத்தொகை.