சீதையின் பிரிவால் இராமன் துயருறல் 3635. | மயில் இயல் பிரிந்தபின், மான நோயினால், அயில்விலன் ஒரு பொருள்; அவலம் எய்தலால், துயில்விலன் என்பது சொல்லற்பாலதோ? உயிர், நெடிது உயிர்ப்பிடை, ஊசலாடுவான். |
மயில் இயல் பிரிந்த பின் - (இராமன்) மயில் போன்ற சாயலை உடைய சீதையைப் பிரிந்த பிறகு; மான நோயினால் - அவமானமாகிய நோயினால்; ஒரு பொருள் அயில் விலன் - எந்த ஒரு பொருளையும் உண்ணவில்லை; அவலம் எய்தலால் - துன்பம் மிகுதி ஆனதால்; துயில் விலன் - உறக்கம் கொண்டானில்லை; என்பது சொல்லற் பாலதோ - என்கிற செய்தியைச் சொல்ல வேண்டுமோ?; நெடிது உயிர்ப்பிடை உயிர் ஊசல் ஆடுவான் - பெருமூச்சின் இடையே உயிர் ஊசலாடப் பெறுவானாயினன். சீதையைப் பிரிந்த அவமானமாகிய, நோய் காரணமாக இராமன் உண்ணவுமில்லை, உறங்கவுமில்லை. பெருமூச்சினால் உயிர் போவது வருவதாய் இருந்தது என்றவாறு. இயல் - சாயல், அயில்தல் - உண்ணல், மயில் இயல் - உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. மானநோய் - உருவகம். 95 3636. | 'மானவள் மெய் இறை மறக்கலாமையின் ஆனதோ? அன்றுஎனின், அரக்கர் மாயமோ? - கானகம் முழுவதும், கண்ணின் நோக்குங்கால் சானகி உரு எனத் தோன்றும் தன்மையே! |
கண்ணின் நோக்குங்கால் - கண்களால் பார்க்கும் போது; கானகம் முழுவதும் - காடு முழுவதும்; சானகி உரு எனத் தோன்றும் தன்மையே - சீதையின் உருவமே என்னும்படி; மானவள் மெய் இறை மறக்கலாமையின் ஆனதோ - பெருமையுடைய சீதையது உருவத்தை (நான்) ஒரு போதும் மறக்காமல் (தொடர்ந்து நினைப்பதால்) உண்டாயிற்றோ?; அன்று எனின் - (அது) அல்ல என்றால்; அரக்கர் மாயமோ - (இவ்வாறு தெரிவது) அரக்கர்கள் செய்த மாயச் செயலோ (என எண்ணி இராமன் வருந்தினான் என்க). |