பக்கம் எண் :

அயோமுகிப் படலம் 723

சீதையின் பிரிவால் இராமன் துயருறல்

3635. மயில் இயல் பிரிந்தபின்,
     மான நோயினால்,
அயில்விலன் ஒரு பொருள்;
     அவலம் எய்தலால்,
துயில்விலன் என்பது
     சொல்லற்பாலதோ?
உயிர், நெடிது
     உயிர்ப்பிடை, ஊசலாடுவான்.

    மயில் இயல் பிரிந்த பின் - (இராமன்) மயில் போன்ற சாயலை
உடைய சீதையைப் பிரிந்த பிறகு; மான நோயினால் -
அவமானமாகிய நோயினால்; ஒரு பொருள் அயில் விலன் - எந்த
ஒரு பொருளையும் உண்ணவில்லை; அவலம் எய்தலால் - துன்பம்
மிகுதி ஆனதால்; துயில் விலன் - உறக்கம் கொண்டானில்லை;
என்பது சொல்லற் பாலதோ - என்கிற செய்தியைச் சொல்ல
வேண்டுமோ?; நெடிது உயிர்ப்பிடை உயிர் ஊசல் ஆடுவான் -
பெருமூச்சின் இடையே உயிர் ஊசலாடப் பெறுவானாயினன்.

     சீதையைப் பிரிந்த அவமானமாகிய, நோய் காரணமாக இராமன்
உண்ணவுமில்லை, உறங்கவுமில்லை. பெருமூச்சினால் உயிர் போவது
வருவதாய் இருந்தது என்றவாறு. இயல் - சாயல், அயில்தல் -
உண்ணல், மயில் இயல் - உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித் தொகை. மானநோய் - உருவகம்.                   95

3636.'மானவள் மெய்
     இறை மறக்கலாமையின்
ஆனதோ? அன்றுஎனின்,
     அரக்கர் மாயமோ? -
கானகம் முழுவதும்,
     கண்ணின் நோக்குங்கால்
சானகி உரு எனத்
     தோன்றும் தன்மையே!

    கண்ணின் நோக்குங்கால் - கண்களால் பார்க்கும் போது;
கானகம் முழுவதும் - காடு முழுவதும்; சானகி உரு எனத்
தோன்றும் தன்மையே -
சீதையின் உருவமே என்னும்படி; மானவள்
மெய் இறை மறக்கலாமையின் ஆனதோ -
பெருமையுடைய
சீதையது உருவத்தை (நான்) ஒரு போதும் மறக்காமல் (தொடர்ந்து
நினைப்பதால்) உண்டாயிற்றோ?; அன்று எனின் - (அது) அல்ல
என்றால்; அரக்கர் மாயமோ - (இவ்வாறு தெரிவது) அரக்கர்கள்
செய்த மாயச் செயலோ (என எண்ணி இராமன் வருந்தினான் என்க).