காடு முழுதும் சீதையின் உருவமாகவே இராமனுக்குத் தோன்றியது. ஒரு பொருளை ஆழ நினைத்தால் அப்பொருளே எங்கும் உருவெளியாகத் தோன்றும் என்பதாம். "நோக்கிய எல்லாம் அவையே போறல்" என்பது தொல்காப்பியர் (1043) சுட்டும் மெய்ப்பாடு. மானவள் - பெருமை உடையவள், இறை - சிறிது, சானகி - சனகனது மகள். உழுகின்ற கொழுமுனையில் உதிக்கின்ற கதிரொளி போல் தோன்றிய தொழுந்தகைய நன்னலத்துப் பெண்ணரசி என்க. மானவள் - மான் + அவள் எனப் பிரித்து மான் போன்ற அவள் என்றும் பொருள் கொள்ளலாம் என்பர். வை. மு. கோ. தன்மையே - ஏகாரம் ஈற்றசை. 96 3637. | கருங்குழல், சேயரிக் கண்ணி, கற்பினோர்க்கு அருங் கலம், மருங்கு வந்து இருப்ப, ஆசையால் ஒருங்குறத் தழுவுவென்; ஒன்றும் காண்கிலேன்; மருங்குல்போல் ஆனதோ வடிவும், மெல்லவே? |
கருங்குழல் - கருமையான கூந்தலினையும்; சேயரிக் கண்ணி - செவ்வரி படர்ந்த கண்களையும் உடைய; கற்பினோர்க்கு அருங்கலம்- கற்பினை உடைய மகளிருக்கு அருமையான அணிகலன் போன்ற (சீதை) ; மருங்கு வந்து இருப்ப - (என்) பக்கத்தில் வந்து இருக்க; ஆசையால் ஒருங்குறத் தழுவுவென் - (அவள் மீது கொண்ட) காதலால் உடல் சேரத் தழுவுவேன்; ஒன்றும் காண்கிலேன் - (ஆனால் அவ்வாறு தழுவியும்) ஒன்றையும் காணவில்லை; வடிவும் - அச்சீதை உடைய உருவமும்; மருங்குல் போல் மெல்லவே ஆனதோ - (அவளது பொய்யோ எனும்) இடையினைப் போல்; மெதுவாக - இல்லையாய்விட்டதா? சீதையின் உருவெளித் தோற்றத்தை உண்மையென நம்பித் தழுவிய இராமன், அவளது இடை போல் உருவமும் இல்லாமல் போய் விட்டதோ என்கிறான். குழல் - கூந்தல். அரி - வரி. மருங்கு - பக்கம். மருங்குல் - இடை. மூவழிப் பெருகி மூவழிச் சிறுகிய உறுப்புகள் கொண்டவள் என்பதைக் கூறியவாறு. கருங்குழல் - பண்புத் தொகை. கற்பினோர் - வினையாலணையும் பெயர். அருங்கலம் - பண்புத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. 97 3638. | 'புண்டரிகப் புது மலரில் தேன் பொதி தொண்டைஅம் சேயொளித் துவர்த்த வாய் அமுது உண்டனென்; ஈண்டு அவள் உழையள் அல்லளால்; |
|