| கண் துயில் இன்றியும் கனவு உண்டாகுமோ? |
புதுப் புண்டரிக மலரில் - சீதையினது முகம் ஆகிய புதிய தாமரை மலரில்; தேன் பொதி - தேன் நிறைந்த; தொண்டை அம் சேயொளி - கொவ்வைப் பழம் போன்றதும் அழகிய சிவந்த நிறத்தையும் உடைய; துவர்த்த வாய் அமுது உண்டனென் - பவள வாயினது அமுதத்தை உண்டேன்; ஈண்டு - (ஆனால்) இங்கு; அவள் உழையள் இன்றியும் கனவு உண்டாகுமோ - கண்ணுறங்காமல் இருக்கும் போது கூடக் கனவு தோன்றுமோ? சீதையின் தாமரை முகத்தில் உள்ள கொவ்வைச் செவ்வாய் அமுது உண்டது போல் எனக்குத் தோன்றியது. ஆனால் உண்மையில் அவள் என் பக்கத்தில் இல்லை. இது தூக்கமில்லாமல் ஏற்பட்ட கனவு என்று சொல்லத் தக்கதோ?' என்று இராமன் வருந்திக் கூறினான். புண்டரிகம் - தாமரை. தொண்டை கொவ்வைப் பழம். துவர்த்த - பவளத்தின் தன்மை வாய்ந்த; உழை - பக்கம். புண்டரிகப் புதுமலர் - உவமையாகுபெயர். சேயொளி - பண்புத் தொகை. துவர்த்த - பெயரெச்சம். ஆல் - ஈற்றசை. 98 3639. | 'மண்ணினும், வானினும், 'மற்றை மூன்றினும், எண்ணினும், பெரியது ஓர் இடர் வந்து எய்தினால், தண் நறுங் கருங் குழல் சனகன் மா மகள் கண்ணினும், நெடியதோ, கொடிய கங்குலே? |
மண்ணினும் - நிலத்தினும்; வானினும் - வானத்தினும்; மற்றை மூன்றினும் - ஐம்பூதங்களில் மூன்றான நீர், தீ, வளி என்பவற்றினும்; எண்ணினும் - எண்ணத்தைக் காட்டிலும்; பெரியது - பெரியதாகிய; ஓர் இடர் வந்து எய்தினால் - ஒரு துன்பம் வந்து அடைந்ததால்; தண் நறுங்கருங்குழல் - குளிர்ந்த நறுமணம் மிக்க கரிய கூந்தலை உடைய; சனகன் மாமகள் - சனகனது சிறப்புக்குரிய மகளான (சீதையினது); கொடிய கங்குல் - (இந்தக்) கொடிய இரவு; கண்ணினும் நெடியதோ - கண்களைக் காட்டிலும் நீண்டதோ? ஐம்பூதங்களிலும் ஆற்றல்மிக்க பேரிடர் வந்து அடைந்தால், சனகன் மாமகள் கண்ணினும் நீண்டதாகியது இக் கொடிய இரவு என்கிறான் இராமன். காதொடும் குழை பொரு கயற்கண்நங்கை 1, 10, 45 என்று சீதையின் கண்களைக் கூறியுள்ளதை நினைக்க. பிரிவினாலும் சீதையின் உருவெளித் தோற்றம் கண்டமையாலும் இவ்வாறு கூறினான் என்க. மற்றை மூன்று, நீர், தீ, வளி என்பன. மாமகள் - உரிச்சொல் தொடர். 'எய்தினால்' என்பது பொருள் |