பக்கம் எண் :

730ஆரணிய காண்டம்

3645.மரபுளி நிறுத்திலன்,
     புரக்கும் மாண்பிலன்,
உரன் இலன் ஒருவன் நாட்டு
     உயிர்கள் போல்வன;
வெருவுவ, சிந்துவ,
     குவிவ, விம்மலோடு
இரிவன, மயங்குவ,
     இயல்பு நோக்கினர்.

 

3646.மால் வரை உருண்டன
     வருவ; மா மரம்
கால் பறிந்திடுவன;
     கான யாறுகள்
மேல் உள திசையொடு
     வெளிகள் ஆவன;
சூல் முதிர் மேகங்கள்
     சுருண்டு வீழ்வன;

இச் செய்யுள்கள் மூன்றும் ஒரு தொடர்ச்சி

     (கவந்தனின் கைப்பரப்புக்குள் சிக்கிய); யானையே முதல்
எறுப்பு இனம் கடையுற உறுப்பு உடை உயிர் எலாம் -
பேருருவம்
கொண்ட யானை முதலாகச் சிறு வடிவம் கொண்ட எறும்பு வரையுள்ள
உடல் கொண்ட உயிர்கள் யாவும்; உலைந்து சாய்ந்தன -
நிலைகுலைந்து சாய்ந்தன; வெறிப்பு உறு நோக்கின - அவை
வெறித்த பார்வையுடையனவாய்; வெருவுகின்றன - அஞ்சின; பறிப்பு
அருவலையிடைப் பட்ட பான்மைய -
(மேலும் அவை) நீக்குதற்கு
அரிய வலையிலே அகப்பட்டுக் கொண்ட தன்மையுடையவையாயின.

     மரபுளி நிறுத்திலன் - அந்தந்த நிலைகளில் அவ்வவற்றை
நிறுத்தாதவனும்; புரக்கும் மாண்பு இலன் - ஆளும் மாட்சிமை
இல்லாதவனும்; உரன் இலன் ஒருவன் - வலிமை இல்லாதவனும்
ஆகிய ஓர் அரசனின்; நாட்டு உயிர்கள் போல்வன - நாட்டிலே
வாழ்கின்ற குடி மக்களைப் போன்றவையாயின; வெருவுவ -
அவ்வுயிர்கள் யாவும் அஞ்சின; சிந்துவ - சிதறின; குவிவ -
(உள்ளமே யன்றி) உடல்களும் குவிந்தன; விம்மலோடு இரிவன -
துயரத்தோடு ஓடின; மயங்குவ - திகைத்து நின்றன; இயல்பு
நோக்கினர் -
இவ்வாறு துன்புற்ற உயிர்களின் தன்மையை
இராமலக்குவர் பார்த்தனர்.

     மால்வரை உருண்டன வருவ - பெரிய மலை(ப் பாறைகள்)
உருண்டு வந்தன; மா மரம் கால் பறிந்திடுவன - மரங்கள் வேர்
அற்று வீழ்ந்தன; கான யாறுகள் மேல் உள திசையொடு வெளிகள்
ஆவன -
மேலே உள்ள