பக்கம் எண் :

கவந்தன் படலம் 733

இராவணன்; உறையும் ஊரும் - வாழ்கின்ற ஊர்; இவ் அளவையது
ஆகுதல் ஐய அறிதி -
இந்த எல்லைக்குள் இருப்பதை அறிக; நம்
கிளர் பெருந் துயரமும் கீண்டது ஆம்' -
கிளர்கின்ற நம் பெருந்
துயரமும் அழிந்தது'; என - என்று சொல்ல,

     கவந்தன் கரங்களின் நெருக்கலால் ஏற்படும் விளைவுகள்என்பதை
அறியாமல், ஏற்படும் ஆரவாரங்களும் நிலை குலைவுகளும்அரக்கர்
சேனையின் வரவால் விளைவன என்று தவறாக நம்பினர்.சேனையின் வரவு
என்று கருதியதால், அச் சேனையை ஏவும்இராவணனது இருக்கையும்
பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பதுஇராமனின் கருத்து. 'இராவணன்
சேனை வந்து விட்டதால் போரிட்டுவென்று சீதையை மீட்டுவிடலாம்' என்ற
நினைப்பினால், 'நம் பெருந்துயரும் கீண்டது' என்கிறான் இராமன். அறிவு
குறைந்தவள், பேதை,வலிமை குறைந்தவள் பெண் என்ற பழங்கருத்தினால்
சீதாபிராட்டியையும் 'ஏழை' என்றது மரபு வழிப்பட்ட புலமை.இளையவனை
'ஐய' என்றது அன்பினால் வந்த மரபு வழுவமைதி.கிளர் துயரம் -
வினைத்தொகை; பெருந் துயரம் - பண்புத் தொகை.இச் செய்யுள் குளகம்.  7

3650.'முற்றிய அரக்கர்தம்
     முழங்கு தானையேல்,
எற்றிய முரசு ஒலி,
     ஏங்கும் சங்கு இசை,
பெற்றிலது; ஆதலின், பிறிது
     ஒன்று ஆம்' எனச்
சொற்றனன் இளையவன், தொழுது
     முன் நின்றான்.

    முற்றிய அரக்கர்தம் முழங்கு தானையேல் - நம்மைச் சுற்றி
வளைத்த அரக்கர்களின் சேனையாக இருக்குமென்றால்; எற்றிய முரசு
ஒலி -
(குறுந்தடி கொண்டு) தாக்குதலால் எழும் முரசுகளின்
ஓசையையும்; ஏங்கும் சங்கு இசை - ஒலிக்கின்ற சங்குகளின்
ஓசையையும்; பெற்றிலது - நாம் கேட்கும் ஆரவாரம்
பெற்றிருக்கவில்லை; ஆதலின் பிறிது ஒன்று ஆம் - ஆகையால்,
நாம் கேட்கும் ஆரவாரம் வேறு ஏதோ ஒன்றாகும் (போர்ப் படையின்
ஆரவாரம் அன்று); என இளையவன் சொற்றனன் - என்று தம்பி
இலக்குவன் சொல்லி; தொழுது முன் நின்றான் - இராமனை வணங்கி
அவன் முன் நின்றான்.

     போர்ப் பறையும் வீரர்கள் ஊதும் சங்கின் ஓசையும்
கேட்காததால் படை ஏதும் வரவில்லை என்பதை இளையவன்
தெளிந்து கூறினான். எத்துணைப் பெரியராயினும் உணர்ச்சி நிலை
குலைந்தால் குழம்புவர் போலும். இது போலவே, கானக
வாழ்வின்போது தமையன் தவறாகக் கணித்த நேரங்களில் தம்பி
தெளிவு கூறிய வேறு இடங்களும் உண்டு. எடுத்துக் காட்டாக மாரீச
மான் பற்றிய நிகழ்ச்சி காண்க. தொழுதமைக்குத் தான் ஏதோ தெளிந்த
பெருமிதத்தான் என்று கருதிக் கொள்ளாமை காரணம்; முன்
நின்றமைக்கு ஆபத்து வருமேல் 'முன்னம் முடி' என்று தாய்
சுமித்திரை ஏவிய நினைவு காரணம்.