பக்கம் எண் :

734ஆரணிய காண்டம்

3651.'தெள்ளிய அமுது எழத்
     தேவர் வாங்கிய
வெள் எயிற்று அரவம்தான்?
     வேறு ஓர் நாகம்தான்?
தள்ள அரு வாலொடு
     தலையினால் வளைத்து,
உள் உறக் கவர்வதே
     ஒக்கும்; ஊழியாய்!'

    'ஊழியாய்' - எல்லாம் அழிகின்ற ஊழிக்காலத்தும் நிலைத்து
நிற்பவனே; தெள்ளிய அமுது எழ - தெளிந்த அமுதம் தோன்றிட;
தேவர் வாங்கிய - தேவர்கள் (மந்தர மலையிலே கயிறாகச் சுற்றி)
இழுத்த; வெள் எயிற்று அரவம்தான் - வெள்ளைப் பற்கள் கொண்ட
வாசுகி நாகமோ; வேறு ஓர் நாகம்தான் - அல்லது வேறு ஒரு
பாம்போ; தள்ள அரு வாலொடு தலையினால் வளைத்து -
ஒதுக்கித் தள்ளுதற்கு அரிய வாலோடு தலையையும் பிணைத்து
வளைத்து; உள் உறக் கவர்வதே ஒக்கும் - (தன் வளைவுக்குள்
சிக்கியவற்றையெல்லாம்) தன்னுள்ளே பற்றிக் கொள்வதைப் போல
காணப்படுகின்றது' (என்று இலக்குவன் கூறினான்).

     கவந்தனின் கரங்கள் வளைவது ஒரு மாபெரும் பாம்பு வாலை
தலையொடு பிணைத்திருப்பதுபோல் காணப்படுகின்றது. தலையினும்
வால் பகுதி மெலிந்திருப்பது பாம்பின் வடிவம்; எனவே, இங்கு
உவமை வடிவத்தைக் குறித்ததன்று; வளைத்தல் தொழிலே இங்கு
பொதுத்தன்மை. ஊழி பெயரினும் தான் பெயராதது பரம்பொருள்;
இராமன் பரம்பொருளின் அவதாரமாதலின் 'ஊழியாய்' என விளிக்கப்
பெற்றான். அரவம்தான், நாகம்தான் என்ற இடங்களில் தேற்றப்
பொருள் தரும் 'தான்' ஐய வினாப் பொருளில் வந்தது.               9

கவந்தன் தோற்றம்

3652. என்று இவை விளம்பிய
     இளவல் வாசகம்
நன்று என நினைந்தனன்,
     நடந்த நாயகன்;
ஒன்று இரண்டு யோசனை
     உள் புக்கு, ஓங்கல்தான்
நின்றென இருந்த அக் கவந்தன்
     நேர் சென்றார்.

    என்று இவை விளம்பிய - என்று இவற்றைச் சொல்லிய;இளவல்
வாசகம் -
தம்பி இலக்குவனின் வார்த்தை; நன்று என -பொருத்தமானதே
என்று; நடந்த நாயகன் நினைந்தனன் - (உயிர்கள்மேல் கொண்ட
இரக்கத்தால் அவதரித்துப் புவி மீது) நடந்ததலைவனாகிய இராமன்