பக்கம் எண் :

74ஆரணிய காண்டம்

 தாய் வர, நோக்கிய
     கன்றின் தன்மையார்.

    ஆய்வரும் பெருவலி அரக்கர் நாமமே - மேன் மேலாய் மிக்கு
வளரும் பெரிய வலிமையுடைய இராக்கதர்களின் பெயரையே; வாய்வெரீஇ
அலமரும் மறுக்கம் நீங்கினார் -
வாயால் சொல்லவும் அஞ்சி வருந்தும்
மனக்குழப்பத்தைநீங்கினவர்களாகிய அம் முனிவர்கள்; தீ வருவனத்திடை-
நெருப்புப் பற்றி எரியும்காட்டில்; இட்டுத் தீர்ந்தது ஓர் தாய் வர- விட்டு
நீங்கிய ஒப்பற்ற தாய்ப்பசுமீண்டு வர; நோக்கிய கன்றின் தன்மையார் -
அதனைக் கண்ட இளங்கன்றின்நிலைமையையுடையவரானார்கள்.

     தீ வரு வனம் அரக்கர்களுக்கும், கன்று முனிவர்களுக்கும், தாய்ப்பசு
இராமனுக்கும் உவமைகள்.'ஆடவர் எல்லாம் தாயை முன்னிய கன்று என
நின்று உயிர் தளிர்ப்ப' (1370) எனத் தயரதன்இருந்த இடத்திற்குச் சென்ற
இராமனைக் கண்ட மக்கள் கொண்ட உணர்வுடன் ஒப்பு நோக்கத்தக்கது.
அலமருதல் - திகைத்து வருந்துதல். மறுக்கம் - தத்தளிப்பு.             5

2636.கரக்க அருங் கடுந் தொழில்
     அரக்கர் காய்தலின்,
பொரற்கு இடம் இன்மையின்
     புழுங்கிச் சோருநர்,
அரக்கர் என் கடலிடை
     ஆழ்கின்றார், ஒரு
மரக்கலம் பெற்றென,
     மறுக்கம் நீங்கினார்.

    கரக்க அரும் கடுந் தொழில் அரக்கர் காய்தலின்- மறைப்பதின்றிச்
செய்யும் கொடிய செய்கைகளை உடைய இராக்கதர்கள் பகையால்
வருத்துவதால்; பொரற்கு இடம் இன்மையின் - போராடுவதற்குத் தமக்கு
இடம் இல்லாமையால்; புழுங்கிச்சோருநர் - மனம் நொந்து
சோர்வடைந்தவர்களும்; அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார்-
இராக்கதர் என்னும் கடலிடை விழுந்து மூழ்குகின்றவர்களும் ஆன
அம்முனிவர்கள்; ஒருமரக்கலம் பெற்றென - ஒரு கப்பலைப்
பெற்றாற்போல; மறுக்கம் நீங்கினார் - (இராமனைக் கண்டதும்) மனக்
கலக்கம் நீங்கப் பெற்றனர்.

     அரக்கர் யாரிடமும் அஞ்சார் ஆதலால் கரக்கருந் கடுந் தொழில்
அரக்கர் எனப்பட்டனர்.கடலிடை மூழ்க இருந்தவர்க்குத் தப்பிப் பிழைக்கக்
கப்பல் ஒன்று கிடைத்தது போல் அரக்கரால்துன்புற்ற முனிவர்களுக்கு
இராமன் உதவி புரிய வந்தனன். அரக்கர் - கடல், முனிவர் - கடலில்
ஆழ்வோர், இராமன் - மரக்கலம் என உருவகம் செய்துள்ளார். போர்புரிய
முனிவர்க்குத் தவநிலைஇடம் தராது.                               6