பக்கம் எண் :

கவந்தன் படலம் 765

வெதிர் பொரும் தோளினாளை நாடுதல்
     விழுமிது' என்றான்.
அதிர் கழல் வீரர்தாமும், அன்னதே
     அமைவது ஆனார்.

    'கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை - சூரிய
தேவனின் மகனும் பொன்போல ஒளிகொண்ட நிறம் உடையவனும்
ஆகிய சுக்கிரீவனை; எதிர் எதிர் தழுவி - ஒருவருக்கொருவர் எதிர்
கொண்டு தழுவி; நட்பின் இனிது அமர்ந்து - நட்பிலே இனிது
பொருந்தி; அவனின் - அவன் உதவியால்; ஈண்ட - விரைவாக;
வெதிர் பொரும் தோளினாளை - மூங்கிலை ஒத்த தோள் கொண்ட
சீதையை; நாடுதல் விழுமிது - தேடுவது சிறந்தது; என்றான் - என்று
கவந்தன் கூறினான்; அதிர்கழல் வீரர் தாமும் - ஒலிக்கும் வீரக்கழல்
அணிந்த இராமலக்குவர்களாகிய வீரர்களும்; அன்னதே அமைவது
ஆனார் -
அவன் சொன்னதையே உடன்பட்டார்கள்.

     சுக்கிரீவன் கதிரவன் மைந்தன்; பொன்னிற மேனி உடையவன்.
நிறத்தினான் என்ற சொல்லுக்கு உடல் உடையவன் என்றும் பொருள்
கொள்ளலாம். அதிர் கழல் - வினைத்தொகை.              55

3698. ஆன பின், தொழுது வாழ்த்தி, அந்தரத்து
     அவனும் போனான்
மானவக் குமரர்தாமும் அத் திசை வழிக்
     கொண்டு ஏகி
கானமும் மலையும் நீங்கி, கங்குல் வந்து
     இறுக்கும் காலை,
யானையின் இருக்கை அன்ன, மதங்கனது
     இருக்கை சேர்ந்தார்.

    ஆனபின் - அதன்பின்; அவனும் - கவந்தன்; தொழுது
வாழ்த்தி -
இராம இலக்குவரைத் தொழுது வாழ்த்தி; அந்தரத்துப்
போனான் -
விண் வழியே போனான்; மானவக் குமரர்தாமும் -
மனு மரபில் தோன்றியவர்களாகிய இராமலக்குவரும்; அத் திசை
வழிக்கொண்டு ஏகி -
கவந்தன் குறித்த இரலை மலை இருந்த திசை
நோக்கிய வழியிலே சென்று; கானமும் மலையும் நீங்கி - காடும்
மலையும் கடந்து; கங்குல் வந்து இறுக்கும் காலை - இரவு நேரம்
வந்து சேர்ந்தபோது; யானையின் இருக்கை அன்ன - யானைகள்
இருக்கும் இடம் போன்ற; மதங்கனது இருக்கை சேர்ந்தார் - மதங்க
முனிவரது ஆச்சிரமத்தை அடைந்தார்கள்.

     மனு மரபில் வந்தவர் மானவர்; வட மொழித் தத்திதாந்த நாமம்.
மானம் என்பது தமிழில் உயர்வைக் குறிக்கும்; உயர்வுடைய குமரர்என்ற