பக்கம் எண் :

770ஆரணிய காண்டம்

முதலியவற்றைக் கொண்டு வந்து தர; விருந்து செய்து இருந்த
வேலை -
அவள் அளித்த விருந்தினை ஏற்று இராமலக்குவர் இருந்த
நேரத்தில்.

     இது குளகச் செய்யுள்; மேல் 3703 ஆம் செய்யுளில் 'என்ன' என
வரும் எச்சம் கொண்டு முடியும்.

     காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குதல் பக்தியின் இயல்பான
மெய்ப்பாடு. இங்கே பக்தியுணர்வுமட்டுமன்றி, பரம்பொருளாய
இராமனைப் புறக்கண்ணாலும் காணப்பெற்ற மகிழ்ச்சியும் கண்ணீர்
அருவிக்குக் காரணமாயிற்று. மாண்டது, வந்தது, போயது என்ற இறந்த
கால வினைமுற்றுகள் தெளிவு பற்றி வந்த கால வழுவமைதி. உலகப்
பற்று என்பது ஒரு பொய்த்தோற்றத்தால் ஏற்படுவது என்பதால் 'மாயப்
பாசம் என்றார். முன்னையோர் சேகரித்து விட்டுச் செல்வது செல்வம்
ஆகாது; தம் முயற்சியால் சேர்ப்பதே செல்வம், பயன் தான் செய்த
தவத்தின் முடிவான பயனைச் செல்வம் என்றாள் சவரி. அச் செல்வப்
பயன் பிறவாமைப் பேறாகும். வேண்டிப் பெறாமல் தவத்தின்
வாகையாய்ப் பெற்றாள் என்பது சிறப்பு. 'என் மாயப் பாசம் மாண்டது'
என்பது இயல்பான சொற் கிடக்கை; இங்கு மாறி, பயனிலையை
முன்னிறுத்தி 'மாண்டது என் மாயப் பாசம்' என நின்றது; வெற்றி
எக்களிப்பின் புறப்பாடு இது. அப்படியே, வந்தது..... செல்வம்,’
’போயது’ என்ற தொடர்களும் உணரத்தக்கன. 'வேண்டிய' என்பதற்கு
விரும்பிய என்று கொள்வதினும் மிகுதிப் பொருள் கொள்ளுதல் சிறப்பு.   3

சவரி சொன்ன செய்தி

3702.'ஈசனும், கமலத்தோனும், இமையவர்
     யாரும், எந்தை!
வாசவன் தானும், ஈண்டு வந்தனர்
     மகிழ்ந்து நோக்கி,
"ஆசு அறு தவத்திற்கு எல்லை
     அணுகியது; இராமற்கு ஆய
பூசனை விரும்பி, எம்பால்
    போதுதி" என்று, போனார்.

    எந்தை - எம் தந்தையே; ஈசனும் - சிவபெருமானும்;
கமலத்தோனும் - தாமரை மலரில் உள்ள நான்முகனும்; இமையவர்
யாரும் -
தேவர்கள் எல்லாரும்; வாசவன்தானும் - அந்தத்
தேவர்களின் தலைவனான இந்திரனும்; ஈண்டு வந்தனர் மகிழ்ந்து
நோக்கி -
இங்கே வந்து மகிழ்ந்து என்னைப் பார்த்து; ஆசு அறு
தவத்திற்கு எல்லை அணுகியது -
குற்றமற்ற உன் தவத்தின்
முடிவான பயன் வந்துறும் காலம் நெருங்கிவிட்டது; இராமற்கு ஆய
பூசனை விரும்பி -
இங்கு வரவிருக்கும் இராமபிரானுக்குச் செய்ய
வேண்டிய பூசையை விரும்பிச் செய்து முடித்து; எம்பால் போதுதி -
அதன் பின் எம்மிடம் வந்து சேர்வாயாக; என்று போனார் - என்று
சொல்லிப் போயினார்கள்.