இருவினைப் பயனும் நீங்குதற்கு ஏற்ற தவநிலை பெற்றவளாகிய சவரி; மெய்ம்மையின் நோக்கி - (இராமலக்குவரை) மெய்யான அன்போடு பார்த்து; வெய்ய துனை பரித்தேரோன் - வெப்பம் கொண்டதும் விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டப்பெற்றதுமாகிய தேரினைச் செலுத்துவோனாகிய கதிரவனின்; மைந்தன் - மகனாகிய சுக்கிரீவன்; இருந்த - வாழ்ந்து வந்த; அத் துளக்கு இல் குன்றம் - அழிதல் இல்லாத அந்த ருசியமுகம் என்னும் மலையை (அடைதற்குரிய); நினைவு அரிது ஆயற்கு ஒத்த - நினைப்பதற்கு அரியதும் ஆராய்ந்து தெளிந்தால் மட்டுமே தெரியக் கூடியதும் ஆகிய; நெறி எலாம் - வழி முழுவதையும்; நினைந்து சொன்னாள் - எண்ணிப் பார்த்துச் சொன்னாள். அனகன் : குற்றம் இல்லாதவன் நோன்பு : தவம் தவத்தின் பயன் இருவினைப் பிணி நீங்குதல்; சவரி அந்த நிலை அடைந்தவள் என்பதை 'வினை அறு நோன்பினாள்' என்ற தொடர் குறித்தது. இனி இரலை மலைக்குப் போகும் வழியைத் தெரிவதே இராமலக்குவர்களின் அவதாரப் பயணத்துக்கு உண்மைப் பயனாகும்; ஆதலின் 'தெமெய்ம்மையின் நோக்கி' என்றார். இதுவரை நோக்கியது தன் நிலை குறித்தது; இது அவர்கள் அவதாரப் பயணம் குறித்தது. அவ்வழி நினைவிற்கும் கொடுமையானது; மேலும், ஆராய்ந்து தெளிந்தே செல்லுதற்கு உரியது; எனவே, நினைவு அரியது என்றும் ஆயற்கு ஒத்தது என்றும் கூறினார். அறு நோன்பு, துணை பரி வினைத் தொகைகள். துளக்கு - முதனிலைத் தொழிற்பெயர். 6 3705. | வீட்டினுக்கு அமைவது ஆன மெய்ந்நெறி வெளியிற்று ஆகக் காட்டுறும் அறிஞர் என்ன, அன்னவள் கழறிற்று எல்லாம் கேட்டனன் என்ப மன்னோ - கேள்வியால் செவிகள் முற்றும் தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான். |
கேள்வியால் - வேதங்களால்; செவிகள் முற்றும் தோட்டவர்- செவிகள் முழுதும் துளைக்கப்பட்ட பெரியோர்கள்; உணர்வின் உண்ணும் - தங்கள் ஞானத் தெளிவினால் நுகரும்; அமுதத்தின் சுவையாய் நின்றான் - அமுதத்தின் சுவையாக இருக்கின்ற இராமபிரான்; வீட்டினுக்கு அமைவது ஆன - மோட்சத்தை அடைவதற்கு உரிய பொருத்தமான; மெய்ந்நெறி வெளியிற்று ஆக - உண்மையான நெறி வெளிப்படத் தெரியும்படியாக; காட்டுறும் அறிஞர் என்ன - புலப்படுத்துகின்ற ஞானாசிரியர்கள் போல; அன்னவள் கழறிற்று எல்லாம் - அச் சவரி கூறியவற்றையெல்லாம்; கேட்டனன் - (கூர்ந்து) கேட்டுக் கொண்டான்; என்ப மன்னோ - என்று சான்றோர் சொல்லுவர். |