பக்கம் எண் :

84ஆரணிய காண்டம்

    ஆவுக்கு ஆயினும் - பசுக்களைக் காப்பதற்கானாலும்; அந்தணர்க்கு
ஆயினும் -
அந்தணர்களைக்காப்பதற்கானாலும்; எளியவர்க்கு ஆயினும்-
ஏழைகளைக் காப்பதற்கானாலும்; யாவர்க்கு ஆயினும் - எவர்களைக்
காப்பதற்கானாலும்; சாவப் பெற்றவரே - உதவிசெய்து அதனால் இறக்கப்
பெற்றவர்களே; தகை வான் உறை தேவர்க்கும் தொழும் தேவர்கள்
ஆகுவார் -
பெருமை பொருந்திய விண்ணுலகில் வாழும் தேவர்களுக்கும்
தொழுது வணங்கக்கூடியதேவர்களாக ஆவர்.

     ஆ - பசு இது எல்லா உயிரினங்களிலும் புனிதமும் பயன் தருவதும்
ஆதலால் எல்லாவற்றிலும் முன்வைக்கப் பெற்றது. "விடுநில மருங்கின்
மக்கட்கெல்லாம், பிறந்த நாட் டொட்டுஞ் சிறந்ததன்தீம்பால், அறந்தரு
நெஞ்சோடருள் சுரந் தூட்டும்" (மணிமே. ஆபுத்திரன் 51 - 54) என்பர்.
ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் என்று புறநானுறும் (9) குறிக்கும்
அடியோடு இதனை ஒப்பிட்டுக்காணத்தக்கது. எளியர் - மெல்லியர் என்ற
பொருளில் பெண்டிரையும் குறிக்கும். இத்தகையோர்க்குஉதவி செய்வதால்
இறந்தோர் தேவர்க்குள்ளும் சிறந்த தேவராவர். இப்படலத்தை அடுத்துச்
சடாயுகாண்படலம் வருவதும் இப் பாடலின் பொருட் சிறப்பை எண்ணிப்
பார்க்க இடம் தருகிறது. ஆயினும்என்பது எண்ணிடைச் சொல்.        21

2652.'சூர் அறுத்தவனும்,
     சுடர் நேமியும்,
ஊர் அறுத்த
     ஒருவனும், ஓம்பினும்,
ஆர் அறத்தினொடு அன்றி
     நின்றார் அவர்
வேர் அறுப்பென்; வெருவன்மின்
     நீர்' என்றான்.

    சூர் அறுத்தவனும் - சூரபன்மனை வேல் கொண்டழித்த முருகக்
கடவுளும்; சுடர் நேமியும் - பகைவரை ஒளியோடு கூடியசக்கரத்தால்
அழிக்கும் திருமாலும்; ஊர் அறுத்த ஒருவனும் - திரிபுரர் ஊர்களை
எரித்தழித்த சிவபெருமானும்; ஓம்பினும் - துணையாக நின்று காத்தாலும்;
ஆர்அறத்தினொடு அன்றி நின்றார் - யார் தருமத்தொடு பொருந்தாமல்
பாவ வழிகளில்நின்றார்களோ; அவர் வேர் அறுப்பென் -
அக்கொடியவர்களை வேரோடு அழியச் செய்வேன்;நீர் வெருவன்மின்
என்றான் -
நீங்கள் அஞ்சாதீர்கள் என்று இராமன் உறுதிமொழிந்தான்.

     திரி மூர்த்திகளில் பிரமனை நீக்கிய காரணம் அவன் வேத நெறியில்
எப்போதும்இருப்பதால் போரிட வாரான் என்பது கருத்து. முருகனை
முதலில் கூறியது தேவ சேனாபதியாக அவன்விளங்குவதாம். அகநானூற்றில்
(59. 10. 11) சூர்மருங்கறுத்த சுடரிலை நெடுவேற் சினமிகு முருகன்எனக்
குறிக்கப் பெறுவான். இராமன் திருமாலின் அவதாரம் எனினும் மனிதனாக