| எய்த யான் செய்தது எத் தவம்?' என்றனன்; ஐயனும், அவற்கு அன்பினன் கூறுவான். |
வைகும் வைகலின் - (அவ்வாறு) தங்கியிருக்கும் பொழுது; மாதவன் - பெருந்தவம் செய்த சுதீக்கணன்; மைந்தன் பால் - இராமனிடத்தில்; செய்கை யாவையும் செய்து - செய்ய வேண்டிய உபசாரங்கள் எல்லாவற்றையும் செய்து; 'செல்வ! இவண் நீ எய்த யான் செய்தது எத்தவம்?'என்றனன் - செல்வமுடையவனே! இங்கு நீ எழுந்தருளும் படி நான் செய்தது எத்தகையதவமோ என்று சொன்னான்; ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான் - இராமனும் அம்முனிவனுக்கு அன்புடையவனாய்ச் சொல்லுவான். வைகல் - வேளை என்றுமாம் செல்வன் - அரசச் செல்வமுடையவன்; இம்மை மறுமை மோட்சச்செல்வங்களை அருள்பவன் என்றுமாம். தம்மிடம் வந்தவரிடம் இன்மொழி பேசி மகிழ்வுறச்செய்தல் தலையாய செய்கையாம். 29 2660. | 'சொன்ன நான்முகன்தன் வழித் தோன்றினர் முன்னையோருள், உயர் தவம் முற்றினார் உன்னின் யார் உளர்? உன் அருள் எய்திய என்னின் யார் உளர், இற் பிறந்தார்?' என்றான். |
சொன்ன நான்முகன் தன்வழித் தோன்றினர் முன்னையோருள் - சிறப்பாகக் கூறப் பெற்ற பிரமனின் வமிசத்தில் பிறந்தவர்களாகிய முதன்மை பெற்ற பண்டையமுனிவர்களுள்; உயர்தவம் முற்றினார் உன்னின் யார் உளர் - சிறந்த தவத்தை முற்றச்செய்தவர் உன்னைப் போல வேறு எவர் இருக்கின்றனர்?; உன் அருள் எய்திய இற்பிறந்தார்என்னின் யார் உளர் என்றான் - உன் அருளை அடைந்த இல்வாழ்க்கையில் தோன்றினோர் என்னைப் போலப் பேறு பெற்றவர் வேறு எவர் உள்ளார் எனக் (இராமன்) கூறினான். சொன்ன - ஆன்றோர் யாவரும் புகழ்ந்து கூறிய என்றுமாம். நான்முகன் வழியில்தோன்றியவர் அந்தணர் ஆவர். உயர்தவம் முற்றினார் என்ற தொடர் 'சுதீக்கணன்' என்றபெயரினை (2657) விளக்கி நிற்கிறது. இற்பிறந்தார் - நற்குடியில் பிறந்து இல்லறத்திலேவாழ்பவர்; உன்னின் - ஆலோசித்தால் என்றுமாம், முனிவரின் அருளைப் பெற்றதால் என்னினும் பேறு பெற்றவர் யாருமில்லை என்றான், தற்புகழ்ச்சியன்று. 30 |