| இன்றுகாறும் நின்று ஏமுறுமால்; அவற் சென்று சேருதி; சேருதல், செவ்வியோய்! நன்று தேவர்க்கும்; யாவர்க்கும் நன்று' எனா, |
அன்றியும் நின் வரவினை ஆதரித்து - அல்லாமலும் உன்னுடைய வருகையை விரும்பி; இன்று காறும் நின்று ஏமுறுமால் - இன்று வரையிலும் எதிர்பார்த்து இருந்து மகிழ்ச்சி அடைவார் ஆதலால்; அவற் சென்று சேருதி - நீ போய் அகத்தியரை அடைவாயாக; செவ்வியோய் சேருதல் தேவர்க்கும் நன்று - சிறந்தவனே! அகத்தியரை அடைதல் விண்ணவர்க்கும் நல்லதே; யாவர்க்கும் நன்று எனா - மற்றெல்லார்க்கும் நல்லதே ஆகும் என்று கூறி, இராமனின் வரவு இராவணாதிகளை அழித்து யாவர்க்கும் நன்மை புரியும் என மகிழ்வுற்றார்.அரக்கரின் அழிவுக்கு உதவும் கருவிகளை இராமன் பெற வருவான் என எண்ணிய மகிழ்ச்சியுமாம்.செவ்வியோய் - அழகுடையோய் என்றுமாம். ஏமுறல் - ஏக்கமடைதல் என்று பொருள் கூறி இராமன்எப்போது வருவான் என எதிர் பார்த்து ஏங்கினார் என்றும் உரைப்பர். முன்னுள்ள பாடலில்(2663) கூறிய 'நல்லதே நினைந்தாய்' என்றதனை மேலும் விரித்துக்கூறியதாம். 34 இராமன் அகத்தியனைச் சேர்தல் 2665. | வழியும் கூறி, வரம்பு அகல் ஆசிகள் மொழியும் மா தவன் மொய்ம் மலர்த் தாள் தொழா, பிழியும் தேனின் பிறங்கு அருவித் திரள் பொழியும் சோலை விரைவினில் போயினார். |
வழியும் கூறி வரம்பு அகல் ஆசிகள் மொழியும் மாதவன் மொய்ம் மலர்த்தாள் தொழா -அகத்தியர் ஆச்சிரமத்திற்குச் செல்லும் வழியை விளக்கமாகச் சொல்லி எல்லையற்ற ஆசிமொழிகளைக் கூறும் பெருந் தவத்தோனாம் சுதீக்கணரின் வண்டுகள் மொய்க்கும் தாமரை மலர்போன்ற திருவடிகளை வணங்கி; பிழியும் தேனின் பிறங்கு அருவித்திரள் - அடையிலிருந்துபிழியப்படும் தேன் ஒழுக்குப் போன்று விளங்கிய அருவித் தொகுதிகள்; பொழியும் சோலைவிரைவினில் போயினார் - நீரைச் சொரியும் தவச் சாலையிலிருந்து (இராமன் முதலோர்)விரைவாகச் சென்றனர். |