பக்கம் எண் :

நட்புக் கோட் படலம்101

வாலி, தான் வராமல் இருக்கவேண்டி அடைத்ததாகக் குற்றம் சாட்டினான்
ஆதலின், இது கூற வேண்டியதாயிற்று.

     மேரு மலை நீங்கலாகப் பிறமலைகளை எல்லாம் அடுக்கியதாகக் கூறியது
உயர்வு நவிற்சி அணியாகும்.                                      57

3843.'சேமம் அவ் வழிச் செய்து, செங் கதிர்க்
கோமகன்தனைக் கொண்டுவந்து, யாம்
மேவு குன்றின்மேல் வைகும் வேலைவாய்,
ஆவி உண்டனன் அவனை, அன்னவன்.

     அவ்வழிச் சேமம் செய்து -அந்தப் பிலத்து வழியை (குன்றுகளால்
அடைத்து) பாதுகாவலைச் செய்து;செங்கதிர்க் கோமகன்தனை -சிவந்த
கதிர்களை உடைய சூரியன் மைந்தனாம் சுக்கிரீவனை;கொண்டு வந்து -
அழைத்துக்கொண்டு வந்து;யாம் -நாங்கள்;மேவு குன்றின் மேல் -
எங்கள் இருப்பிடமாகிய கிட்கிந்தை மலைமேல்;வைகும் வேலைவாய்-
தங்கியிருந்த காலத்தில்;அவனை -அந்த மாயாவியை;அன்னவன் -
அவ்வாலி;ஆவி உண்டனன் -கொன்றான்.

     வழியை அடைத்த பின்னர்ச் சுக்கிரீவன் அரசனாக்கிக் கிட்கிந்தையில்
தங்கியிருந்தபோது வாலி மாயாவியைக் கொன்றிட்டான் என்பதாம். சேமம் -
பாதுகாவல்; உயிரை உண்டனன்- உண்ணப் பெறாததை உண்டதாகக் கூறுவது
இலக்கணை.                                                    58

3844.'ஒளித்தவன் உயிர்க் கள்ளை
     உண்டு, உளம்
களித்த வாலியும்,
     கடிதின் எய்தினான்;
விளித்து நின்று, வேறு
     உரை பெறான்; ''இருந்து
அளித்தவாறு நன்று,
     இளவலார்! '' எனா,

     ஒளித்தவன் - (பிலத்தில் புகுந்து) ஒளித்தவனாகிய மாயாவியின்;
உயிர்க் கள்ளை உண்டு -
உயிராகிய கள்ளை உண்டு;உளம் களித்த
வாலியும் -
மனம் களிப்படைந்த வாலியும்;கடிதின் எய்தினான் -
விரைவாகப் பிலத்து வாயிலை அடைந்து;விளித்து நின்று -(வாயில்
அடைபட்டிருந்ததால்) சுக்கிரீவனை அழைத்து நின்று;வேறு உரை பெறான்-
மறுமொழி ஒன்றும் பெறாதவனாய்;இளவலார் - 'என் தம்பியார்;இருந்து -
வாயிலில் இருந்து;அளித்தவாறு நன்று-காவல் செய்தவிதம் நன்று;எனா-
என்று சொல்லி. . . .