வாலி, தான் வராமல் இருக்கவேண்டி அடைத்ததாகக் குற்றம் சாட்டினான் ஆதலின், இது கூற வேண்டியதாயிற்று. மேரு மலை நீங்கலாகப் பிறமலைகளை எல்லாம் அடுக்கியதாகக் கூறியது உயர்வு நவிற்சி அணியாகும். 57 | 3843. | 'சேமம் அவ் வழிச் செய்து, செங் கதிர்க் கோமகன்தனைக் கொண்டுவந்து, யாம் மேவு குன்றின்மேல் வைகும் வேலைவாய், ஆவி உண்டனன் அவனை, அன்னவன். |
அவ்வழிச் சேமம் செய்து -அந்தப் பிலத்து வழியை (குன்றுகளால் அடைத்து) பாதுகாவலைச் செய்து;செங்கதிர்க் கோமகன்தனை -சிவந்த கதிர்களை உடைய சூரியன் மைந்தனாம் சுக்கிரீவனை;கொண்டு வந்து - அழைத்துக்கொண்டு வந்து;யாம் -நாங்கள்;மேவு குன்றின் மேல் - எங்கள் இருப்பிடமாகிய கிட்கிந்தை மலைமேல்;வைகும் வேலைவாய்- தங்கியிருந்த காலத்தில்;அவனை -அந்த மாயாவியை;அன்னவன் - அவ்வாலி;ஆவி உண்டனன் -கொன்றான். வழியை அடைத்த பின்னர்ச் சுக்கிரீவன் அரசனாக்கிக் கிட்கிந்தையில் தங்கியிருந்தபோது வாலி மாயாவியைக் கொன்றிட்டான் என்பதாம். சேமம் - பாதுகாவல்; உயிரை உண்டனன்- உண்ணப் பெறாததை உண்டதாகக் கூறுவது இலக்கணை. 58 | 3844. | 'ஒளித்தவன் உயிர்க் கள்ளை உண்டு, உளம் களித்த வாலியும், கடிதின் எய்தினான்; விளித்து நின்று, வேறு உரை பெறான்; ''இருந்து அளித்தவாறு நன்று, இளவலார்! '' எனா, |
ஒளித்தவன் - (பிலத்தில் புகுந்து) ஒளித்தவனாகிய மாயாவியின்; உயிர்க் கள்ளை உண்டு -உயிராகிய கள்ளை உண்டு;உளம் களித்த வாலியும் -மனம் களிப்படைந்த வாலியும்;கடிதின் எய்தினான் - விரைவாகப் பிலத்து வாயிலை அடைந்து;விளித்து நின்று -(வாயில் அடைபட்டிருந்ததால்) சுக்கிரீவனை அழைத்து நின்று;வேறு உரை பெறான்- மறுமொழி ஒன்றும் பெறாதவனாய்;இளவலார் - 'என் தம்பியார்;இருந்து - வாயிலில் இருந்து;அளித்தவாறு நன்று-காவல் செய்தவிதம் நன்று;எனா- என்று சொல்லி. . . . |