| | வேறுஇல், ஆதவன் புதல்வன், மெய்ம்மை ஆம் ஆறினானும், வந்து அடி வணங்கினான். |
அவன் - வாலி;ஏறினான் -(பிலத்தினின்று) ஏறியவனாய்;எவரும் அஞ்சுற -எல்லோரும் அஞ்சும்படி;சீறினான் -கோபத்தால் சீறிக்கொண்டு; நெடுஞ்சிகரம் எய்தினான்- பெரிய மலை உச்சியை அடைந்தான்;வேறு இல் -மனத்தில் வேறுபாடு இல்லாத;ஆதவன் புதல்வன் -சூரியன் மைந்தனும்;மெய்ம்மை ஆம் ஆறினானும் -உண்மை நெறியில் நடப்பவனுமான சுக்கிரீவன்;வந்து அடிவணங்கி னான் -(தமையன்) முன்வந்து அவன் பாதங்களில் வணங்கினான். வாலி வேகத்தோடு மலைகளைத் தள்ளிச் சினத்தொடு கிட்கிந்தையை அடைந்தபோது, மனத்தில் களங்கம் இல்லாத காரணத்தால் சுக்கிரீவன் வாலியின் பாதங்களை வணங்கினான். வல்லார் கூறிய நெறிப்படியே ஆட்சியை ஏற்றவன் ஆதலின் 'மெய்ம்மை ஆம் ஆறினான்' என்றார். சுக்கிரீவன் வாலிக்கு அஞ்சி ஒளிய வேண்டிய காரணம் இன்மையால் எதிர்வந்து வணங்கினான். வேறுஇல் - மனத்தில் வேறுபாடு இல்லாத; களங்கமற்ற என்பது கருத்து; தான் வேறு, வாலி வேறு என்றிலாத ஒருமித்த மனமுடையவன் எனலும் பொருந்தும். 61 | 3847. | 'வணங்கி, ''அண்ணல்! நின் வரவு இலாமையால், உணங்கி, உன் வழிப் படர உன்னவேற்கு, இணங்கர் இன்மையால், இறைவ! நும்முடைக் கணங்கள், 'காவல், உன் கடன்மை'' 'என்றனர். |
வணங்கி -அவ்வாறு வணங்கி;அண்ணல் - அண்ணலே;இறைவ - தலைவா! நின் வரவு இலாமையால் -நீண்டகாலம் உன் வருகை இல்லாததால்;உணங்கி -மனம் வருந்தி;உன் வழிப்படர -உன் பின்னர்ப் பிலத்துவழிச் செல்ல;உன்னுவேற்கு -கருதிய எனக்கு; நும்முடைக்கணங்கள் -நும் அமைச்சராகிய வானரக் கூட்டத்தார்;இணங்கர் இன்மையால்- சம்மதிக்காமையோடு;காவல் உன் கடன்மை -'எங்களை ஆட்சி புரிந்து பாதுகாப்பது உனது கடமையாகும்';என்றனர் -என்று கூறினர். இச்செய்யுளில் 'அண்ணல்' என்றது முதல் அடுத்த செய்யுளில் 'பொறாய்' என்னும் அளவும்,முன்னே வாலியினிடத்துச் சுக்கிரீவன் பேசியதை அனுமன் அறிந்து கூறியதாகும். |