பக்கம் எண் :

106கிட்கிந்தா காண்டம்

     எந்தை -எம் ஐயனே! அவன் -அவ்வாலி;எயிறு அதுக்குமேல் -
தன் பற்களைக் கடித்துக் கோபிப்பானாயின்;அந்தகற்கும் - யமனுக்கும்;ஓர்
அரணம் -
(பிழைத்துவாழ) பாதுகாப்பான ஓர் இடம்;இல்லை - இல்லை;
முந்தை உற்றது -
முன்னே (மதங்கமுனிவரால்) அடைந்ததாகிய;ஓர் சாபம்
உண்மையால் -
ஒரு சாபம் உள்ளதாதலின்;இந்த வெற்பின் வந்து -இந்த
மலையில் வந்து;இவன் இருந்தனன் -சுக்கிரீவன் இருப்பானாயினன்.

     வாலியின் சினத்திற்கு இலக்கானவர் யாவரேயாயினும் தப்பிப்
பிழைப்பதற்கு உரிய இடமில்லை.  எல்லா உயிர்களையும் கவரும் யமனுக்கும்
பிழைக்க இயலாது என்பதால் வாலியின் வலிமை உணர்த்தப்பட்டது.
அந்தகற்கும் - உம்மை, உயர்வு சிறப்பும்மை. எயிறு அதுக்குதல் -
கோபக்குறியை உணர்த்தும்  மெய்ப்பாடு.  காரியம் காரணத்தின் மேல் நின்றது.
வாலி, மதங்க முனிவரால் பெற்ற சாபத்தில் இம்மலைப் பகுதிக்கு வரஇயலாது.
அதனால் சுக்கிரீவன் இம்மலையை அரணாகக் கொண்டு இதுகாறும் உயிர்
பிழைத்திருந்தான் என்பதை உணர்த்தினான் அனுமன்.  வாலிக்கு மதங்க
முனிவர் இட்ட சாபத்தைத் துந்துபிப் படலத்தால் அறியலாம்.  அந்தகன் -
உயிர்கட்கு அழிவைச் செய்பவன்;யமன்.                            66

3852.'உருமை என்று இவற்கு
     உரிய தாரம் ஆம்
அரு மருந்தையும்,
     அவன் விரும்பினான்;
இருமையும் துறந்து,
     இவன் இருந்தனன்;
கருமம் இங்கு இது; எம்
     கடவுள்!' என்றனன்.

     எம் கடவுள் -எம் தெய்வமே! உருமை என்று -உருமை என்று
பெயர்பெற்று;இவற்கு உரிய -இச்சுக்கிரீவனுக்கு உரிய;தாரம் ஆம் -
மனைவியாய் இருந்த;அருமருந்தையும்- கிடைத்தற்கரிய தேவாமிர்தம்
போன்றவளையும்;அவன் - விரும்பினான் -அவ்வாலி விரும்பிக் கவர்ந்து
கொண்டான்;இவன் - சுக்கிரீவன்;இருமையும் துறந்து- அரசச்
செல்வத்தையும் மனைவியையும் இழந்து;இருந்தனன் -இம்மலையில்
இருந்தான்;இங்கு இது கருமம் -இங்குக் கூறிய இதுவே நடந்த
செய்தியாகும்;என்றனன் -என்று அனுமன் உரைத்தான்.

     உருமை - சுக்கிரீவன் மனைவி.  வாலி சுக்கிரீவர்களுக்கு மாமனும்,
தேவகுருவாகிய பிரகஸ்பதியின் மகனுமான தாரன் என்னும் வானர வீரனின்
மகள்.  ருமை என்னும் வடசொல் தமிழில் உருமை ஆயது. அருமருந்தையும்
- உம்மை உயர்வு சிறப்பொடு இறந்தது தழுவிய எச்சப்பொருளும் அமைந்தது.
வாலி தனக்குரிய ஆட்சியை எடுத்துக் கொண்டதோடு, சுக்கிரீவனுக்கே உரிய
மனைவியையும் கவர்ந்தான் என வாலியின் கொடுமை கூறப்பட்டது.
அருமருந்து - கிடைத்தற்கரிய தேவாமிர்தம்.  உவமை ஆகுபெயராய்
உருமையைக் குறித்தது.  இருமை - அரசாட்சியையும் இல்லற வாழ்வையும்
குறிக்கும்.  இருமையும் - உம்மை முற்றும்மை