3908. | மோந்திட, நறுமலர் ஆன; மொய்ம்பினில் ஏந்திட, உத்தரியத்தை ஏய்ந்தன; சாந்தமும் ஆய், ஒளி தழுவ, போர்த்தலால், பூந் துகில் ஆய, அப் பூவை பூண்களே. |
அப்பூவை பூண்கள் -நாகணவாய்ப் பறவை போன்று இனிமையாகப் பேசும் அந்தச் சீதை அணிந்த அணிகலன்கள்;மோந்திட -(இராமன்) முகர்ந்து பார்த்தபோது;நறுமலர் ஆன -நறுமணம் வீசும மலர்கள் போலாயின;மொய்ம்பினில் ஏந்திட -அவற்றைத் தோள்களில் தாங்கிக் கொண்ட போது;உத்தரியத்தை ஏய்ந்தன -மேலாடையை ஒத்தன;ஒளி தழுவ -அவற்றின் ஒளி (இராமன் மீது) படிவதால்;சாந்தமும் ஆய் - சந்தனம் போலவும் ஆகி;போர்த்தலால் -(ஒளியால் உடம்பை) போர்த்தியமையால்;பூந்துகில் ஆய -அழகிய போர்வையும் ஆயின. பிராட்டியின் இயற்கை நறுமணம் மிக்க மேனியில் விளங்கிய அணிகலன்களாதலின், இராமபிரான் அவற்றை முகர்ந்து பார்க்கையில் மணமிகு மலர்களால் இன்பம் செய்தன என்பார், 'மோந்திட நறுமலரான' என்றும், அவற்றை மேலாடை போல இராமன் தோளிலிட்டு மகிழ்ந்தனன் என்பார், 'ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன' என்றும், அவற்றைத் தன் உடலில் எங்கும் படுமாறு தழுவிய தால் சந்தனம் பூசியது போல் விளங்கியது என்பார், 'சாந்தமும் ஆய்' என்றும், அவற்றின் ஒளி மேனி முழுவதும் பரவி போர்வை போர்த்தது போல விளங்கியது என்பார், 'போர்த்தலால் பூந்துகில் ஆய' என்றும் கூறினார். அந்த அணிகலன்கள் பல வகையாய் விளங்கி இராமனுக்கு ஆறுதலின்பம் விளைவித்தமையைக் காணலாம். பூவை - உவமை ஆகுபெயர்; பூந்துகில் - அழகிய சித்திர வேலைப்பாடு அமைந்த துகில் என்றும் கொள்ளலாம். துகில் - ஆடை; இங்கே மேற்போர்வை. 8 3909. | ஈர்த்தன, செங்கண் நீர் வெள்ளம், யாவையும்; போர்த்தன, மயிர்ப் புறம் புளகம்; பொங்கு தோள், வேர்த்தன என்கெனோ? வெதும்பினான் என்கோ? தீர்த்தனை, அவ் வழி, யாது செப்புகேன்? |
செங்கண் நீர் வெள்ளம் - (இராமனின்) சிவந்த இரண்டு கண்களினின்றும் பெருகிய கண்ணீர் வெள்ளம்;யாவையும் ஈர்த்தன - அங்குள்ள எல்லாப் பொருள்களையும் இழுத்துச் சென்றன;மயிர்ப் புளகம் - மயிர்ச் சிலிர்ப்புகள்;புறம் போர்த்தன -மேனி முழுமையும் மூடின;பொங்கு தோள் -பூரிக்கின்ற அவன் தோள்கள்;வேர்த்தன என்கெனோ - வியர்த்தன என்று சொல்வேனோ? வெதும்பினான் |