உலகங்கள் -பெரிய உலகங்களிலெல்லாம்;வலியின் புக்கு -வலிமையினால் புகுந்து;இடை தேண்டி -அவ்விடங்களில் எல்லாம் பிராட்டியைத் தேடி; அவ் அரக்கனைத் திருகி -அந்த அரக்கனான இராவணனைத் தலை முறித்து;தேவியை இவ்வழிக் கொணரும் -தேவியாகிய பிராட்டியை இவ்விடம் யான் கொண்டு வந்து சேர்க்கும்;கைப்பணி -என் குற்றேவல் தொழிலை;காண்டி -காண்பாயாக. பெருவலி படைத்த சிறந்த வீரனான இராமன் இச்சிறிய செயலைச் செய்வதற்குச் செல்ல வேண்டுவதில்லை அவன் இவ்விடமே இருக்கலாம் என்பதால், 'ஈண்டு நீ இருந்தருள்' என்றான். இராவணன் எங்கிருப்பினும் அவனைக் கண்டு பிடித்து, அவனைக் கொன்று சீதையை மீட்டுக் கொணர்தல் தன்னால் இயலும் என்பதாலும் 'ஈண்டு நீ இருந்தருள் என்றான். இந்தச் செயல் தன் ஆற்றலுக்கு எளிதே என்பதால் 'கைப்பணி' என்றான். கைப்பணி- சிறுதொண்டு, குற்றேவல், இராமனுக்குச் செய்யும் கைங்கர்யம் எனும்பொருளில் வருவது. 'கைத்தொழில் செய்வேன் என்று கழல் இணை வணங்குங் காலை' (4142) என்ற அனுமன் கூற்று ஈண்டு நோக்கத்தக்கது. கை- சிறுமையை உணர்த்தும் சொல். இடை - இடம், தேண்டி - தேடி என்பதன்விரித்தல் விகாரம்; காண்டி -ஏவலொருமை. 14 3915. | 'ஏவல் செய் துணைவரேம், யாங்கள் ; ஈங்கு, இவன், தா அரும் பெரு வலித் தம்பி; நம்பி! நின் சேவகம் இதுஎனின், சிறுக நோக்கல் ஏன்? மூவகை உலகும் நின் மொழியின் முந்துமோ? |
நம்பி -ஆடவரில் சிறந்தவனே! யாங்கள் -நாங்கள்;ஏவல்செய் துணைவரேம் -நின் ஏவல் வழியில் பணி செய்யும் தோழர்களாக உள்ளோம்; ஈங்கு இவன் - இங்கே உள்ள இலக்குவனோ;தா அரும் பெரு வலித்தம்பி-அழித்தற்கரிய பெரிய வலிமை படைத்த தம்பியாக உள்ளான்; நின் சேவகம்-உனது வீரம்;இது எனில் -இத்தன்மைத்து என்றால்; சிறுக நோக்கல் என்-(உன்னை நீ) குறைபடக் கருதுவது ஏனோ?மூவகை உலகும் -மூன்றுஉலகங்களும்;நின் மொழியின் முந்துமோ -நின் கட்டளையைக்கடக்குமோ? (கடவாது). ஏவிய பணியைச் செய்ய வானரர்கள் இருக்க, தம்பி அளத்தற்கரிய வலிமையுடையவனாய் அருகே இருக்க, உலகமேழும் தன் ஒரு கணைக்கு ஆற்றா வலிமை தன்னிடம் இருக்க, இராமன் வலியற்றான் போலவும், துணையில்லாதவன் போலவும் சோர்வடைதல் தகாது என்று சுக்கிரீவன் உரைத்தான் என்க. சேவகம் - வீரம். ஏழுமராமரங்களையும் ஓரம்பால் துளைத்த செயல் நினைந்து 'இது' எனப் பேசினான். வீரன் என்ற பொருளில் இராமனைச் 'சேவகன்' என்றே பல இடங்களில் கம்பர் கூறுவது காண்க. 'தீராய் ஒரு நாள் வலி சேவகனே' என்ற சீதையின் கூற்றும் (5232) |