ஆகட்டும்;விரைந்து போய் - விரைந்து சென்று;பேதுறும்மின் இடைச் சனகியை -இராவணனால் துன்புற்று வருந்தும் மின்னல் போன்ற இடையை உடைய சீதையை;மீட்டு மீள்தும் -(அவனிடமிருந்து) மீட்டுக் கொண்டு திரும்புவோம்;என்றான் -என்று (சுக்கிரீவன்) சொன்னான். சிறுகுறை என்றது வாலியை வென்ற தன் மனைவி உருமையை மீட்டுத் தருதலை. இராமலக்குவரின் திறமையைக் கண்டதால் வாலியை வெல்லும் செயல் அவர்களுக்கு எளிதாகும் திறத்தால் 'சிறுகுறை' எனக் குறித்தான். தன் துயரினும் இராமன் துயரம் பெரிது எனக் கருதியதாலும் தன் குறையைப் பின்னர் மேற் கொள்ளக்கூடிய 'சிறுகுறை' எனவும் கருதினான் எனலாம். இராமனின் துயரம் போக்குதலே தான் முதலில் செய்ய வேண்டியது என்ற சுக்கிரீவனின் கருத்து இங்கு நோக்கத்தக்கது. மின்இடை - ஒளியாலும், மெல்லிய வடிவாலும் இடைக்கு மின்னல் உவமை. ஒரீஇ - சொல்லிசை அளபெடை; மீள்துமால் - ஆல் அசை. 18 இராமன் சிறிது தெளிந்து, பேசுதல் 3919. | எரி கதிர்க் காதலன் இனைய கூறலும், அருவி அம் கண் திறந்து, அன்பின் நோக்கினான்; திரு உறை மார்பனும், தெளிவு தோன்றிட, ஒருவகை உணர்வு வந்து, உரைப்பது ஆயினான்: |
எரிகதிர்க் காதலன் -சுடுகின்ற கதிர்களை உடைய சூரியன் மக னான சுக்கிரீவன்; இனைய கூறலும் -இவ்வாறான வார்த்தைகளைச் சொன்ன அளவில்;திரு உறை மார்பனும் -இலக்குமியாம் திருமகள் தங்கிய மார்பினை உடைய இராமனும்;தெளிவு தோன்றிட -தெளிவு பிறக்க;ஒரு வகை உணர்வு வந்து -ஒருவாறு தன் நினைவு வரப் பெற்று;அருவி அம் கண்திறந்து -அருவிபோல் கண்ணீர் பெருக்கும் தன் அழகிய கண்களைத் திறந்து;அன்பின் நோக்கினான் -அன்போடு (சுக்கிரீவனைப்) பார்த்து; உரைப்பது ஆயினான் -பின்வருமாறு பேசலுற்றான். சோர்வடைந்து கண்களை மூடியவண்ணம் இருந்த இராமன் சுக்கிரீவன் கூறியவற்றைக் கேட்டதும் கண்களைத் திறந்து, அன்பொடு பார்த்துப் பேசலானான் என்பதாம். திரு உறை மார்பன் - திருமகள் தங்கிய மார்பினை உடைய திருமாலின் அவதாரமான இராமபிராமன். 'அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா' என்பது திருவாய்மொழி (6-10-10). எரிகதிர் - சூரியன் - வினைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. காதலன் -மகன். 19 |