குறை தீர்த்தலையே முதன்மையாகக் கருதியது போல (3918) இராமனும் சுக்கிரீவன் துயர் நீக்க எண்ணியது நல்ல நட்பின் இயல்பை உணர்த்துகிறது. அன்பின் முதிர்ச்சியால் இராமன் சுக்கிரீவனை 'ஐய'! என்று விளித்தான்; இலக்குவனை 'ஐய' (1736) என்றது போல. இப்பழி என்றது, சீதையின் துயரம் போக்காமையால் தனக்கு வரக்கூடிய பழியை. நின்குறை என்பது சுக்கிரீவன் அடைந்த துன்பம். வாலி, மனைவியையும் ஆட்சியினையும் கவர்ந்து கொண்ட நிலை. அக்குறை முடித்தலாவது - வாலியைக் கொன்று, சுக்கிரீவன் மனைவியையும் அரசுரிமையினையும் மீட்டுத் தருதலாகும். உய்தல் - உயிர் தாங்கியிருத்தல்; உறுதி - நல்லது. உய்வெனே, உண்டோ - ஏகார ஓகாரம் எதிர்மறைப் பொருளன. பிறர் துயர் நோக்கும் சான்றோர் பண்பை இப்பாடல் உணர்த்துகிறது. 27 அனுமன், இராமனை நோக்கிப் பேசுதல் | 3928. | என்றனன் இராகவன்; இனைய காலையில், வன் திறல் மாருதி வணங்கினான்; 'நெடுங் குன்று இவர் தோளினாய்! கூற வேண்டுவது ஒன்று உளது; அதனை நீ உணர்ந்து கேள்!' எனா, |
என்றனன்இராகவன் -என்று கூறினான் இராமன்;இனைய காலையில்-இந்தச் சமயத்தில்;வன்திறல் மாருதி -மிக்க வலிமை வாய்ந்த அனுமன்;வணங்கினான் -(இராமனைத்) தொழுது;நெடுங் குன்று இவர் தோளினாய்-பெரிய மலையை ஒத்த தோள்களை உடையவனே! கூற வேண்டுவது -'நான் உன்னிடம் கூற வேண்டியது;ஒன்று உளது - ஒன்று உண்டு;அதனைநீ உணர்ந்து கேள் எனா -அதை நீ கவனித்துக் கேட்பாயாக' என்று . . . . இது முதல் 34வது பாடல் முடியக் குளகமாய் ஒரு தொடராய் இயைந்து வினை முடிபு கொள்ளும். வல்திறல் - ஒரு பொருட் பன்மொழி; இவர்தல் - ஒத்தல். தான் சொல்ல இருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது என்பதால் 'உணர்ந்து கேள்' என்றான். 28 | 3929. | 'கொடுந் தொழில் வாலியைக் கொன்று, கோமகன் கடுங் கதிரோன் மகன் ஆக்கி, கை வளர் நெடும் படை கூட்டினால் அன்றி, நேட அரிது, அடும் படை அரக்கர்தம் இருக்கை - ஆணையாய்! |
|