விட்டுப் பிரிந்திருக்க ஆற்றாதவளாகிய சீதை; நடந்தாள் - பிரிந்தாள்; இல்லளேள் -இங்கில்லை என்பதை உணர்ந்தும்;தளர்ந்த போதும் - பிரிவால் நான் வருந்துகின்ற சமயத்தும்;தகவேயோ -(நீங்கள் இரங்காமலிருப்பது) தகுதி தானா?எரியா நின்ற ஆருயிர்க்கு -பிரிவால் வாடுகின்ற எனது அரிய உயிர்க்கு;இரங்கினால் - இரக்கம் காட்டுவீராயின்; ஈது இசை அன்றோ -இஃது உங்கட்குப் புகழை அன்றோ தரும்? பிரியாது இருந்தேற்கு- இதுகாறும் சீதையைப் பிரியாதிருந்த எனக்கு;ஒரு மாற்றம் பேசின் - (ஆறுதலாக) ஒரு வார்த்தை பேசினால்;பூசல் பெரிது ஆமோ - (உங்களுக்கு அதனால்) பெரிய பொல்லாங்கு உண்டாகுமோ? சீதை அருகில் இருந்தால் அவள் உறுப்புகட்குத் தோற்ற சக்கரவாகப் பறவைகளும், அன்னங்களும் இராமன் முன் தோன்றத் தயங்கலாம்; அவள் இப்பொழுது அருகில் இல்லாததால் இராமன் முன்னர் வரத் தயங்க வேண்டுவதில்லை. நேரில் வந்து ஆறுதல் கூறி உதவலாம் என்றபடி. 'நாளங்கொள் நளினப் பள்ளி நயனங்கள் அமையநேமி வாளங்கள் உறைவ கண்டு மங்கைதன் கொங்கை நோக்கும் (2735) என்றும், 'ஓதிமம் ஒதங்கக்கண்ட உத்தமன் உழையள் ஆகும். சீதை தன் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான்'' (2739) என்றும் சூர்ப்பணகைப் படலத்தில் சக்கரவாகப் பறவையும் அன்னமும் முறையே சீதையின் தனத்திற்கும் தோற்றொளித்து ஓடுவதை குறிப்பதைக் காண்க. 23 | 3732. | 'வண்ண நறுந் தாமரை மலரும், வாசக் குவளை நாள்மலரும், புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின், தரும் பொய்காய்! கண்ணும் முகமும் காட்டுவாய்; வடிவும் ஒருகால் காட்டாயோ? ஒண்ணும் என்னின், அஃது உதவாது, உலோவினாரும் உயர்ந்தாரோ?' |
வண்ண நறுந்தாமரை மலரும் -அழகிய மணம் மிக்க தாமரை மலர்களையும்;வாசக் குவளை நாள் மலரும் -வாசனை பொருந்திய அன்றலர்ந்த குவளை மலர்களையும்;புண்ணின் எரியும் -புண்போல் எரிகின்ற;ஒரு நெஞ்சம் -(சீதையின் பிரிவால்) தனிமையுற்றுக் கலங்கும் நெஞ்சிற்கு;பொதியும் மருந்தின்-மேலே தடவுகின்ற மருந்து போல;தரும் பொய்காய் - காட்டுகின்ற பொய்கையே!கண்ணும் முகமும்- (சீதையின்) கண்களையும் முகத்தையும்;காட்டுவாய் -காட்டுகின்ற நீ;வடிவும் ஒருகால் காட்டாயோ-அவள் முழுவடிவத்தையும் ஒருமுறையேனும் காட்டமாட்டாயா? ஒண்ணும் என்னின் - தம்மால் உதவ இயலுமாயின்;அஃது உதவாது - அவ்வுதவியைச் செய்யாமல்;உலோவினாரும் உயர்ந்தாரோ -உலோபம் செய்பவர்களும் உயர்ந்தவர்கள் ஆவரோ? (ஆகார்). |