படர்ந்தது போல;நகையால் -(நின்) சிரிப்பால்;என்னை நலிவாயோ - என்னை வருத்துவாயோ? எப்போதும் என் மனத்தாமரையில் தங்கியிருக்கும் சீதையின் கண்களை நீ ஒத்திருத்தலால், அவள் என்னிடம் அன்புகாட்டுதல் போல் நீயும் அன்புகாட்ட வேண்டியதிருக்க, என் துன்பங்கண்டு பரிகசித்து மகிழ்தல் தக்கதன்று என்பதாம். திருமகள் தங்குமிடம் தாமரை ஆதலாலும், இராமன் மனத்தில் அவள் என்றும் இருப்பதாலும் 'என் நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம்' என்றார். சீதையின் திருவடிகள் தாமரை மலராகவும், செம்பஞ்சூட்டிய விரல்கள் தாமரையில் பூத்த பவளமாகவும் கொள்ளத்தகும். ''பாற்கடல் பிறந்த செய்ய பவளத்தைப் பஞ்சியூட்டி ''மேற்பட மதியஞ் சூட்டி விரகுற நிரைத்த - மெய்ய - காற்றகை விரல்கள், (4479)' பஞ்சியூட்டிய பரட்டிசை கிண்கிணிப்பதுமச் செஞ்செவிச் செழும் பவளத்தின் கொழுஞ்சுடல் (4838) என்பனவும் காணத்தகுவன. 'பூத்த' என்ற சொல் பலமுறை பயின்றமையால் சொற்பின்வருநிலை அணியாகும். 'நகுதல்' என்பது இங்கு மலர்தல். (பரிகாசமாகச்) சிரித்தல் எனும் ஒரு பொருளையும் தந்தது. மலரின் இயல்பான மலர்ச்சியைப் பரிகாசச் சிரிப்பாகக் கொண்டது தற்குறிப்பேற்ற அணியாகும். நஞ்சு வருத்துவதாலும் கருநிறத்தாலும் குவளைக்கு உவமை. 'நஞ்சினும் கொடிய நாட்டம்' (896) என்றது காண்க. சீதை கூந்தலுக்கு மழை உவமையாதல் 'மழையேந்திய குழலாள்' (1931) என்ற அடியும் உணர்த்தும். 31 கலிவிருத்தம் | 3740. | என்று அயா உயிர்க்கின்றவன், ஏடு அவிழ் கொன்றை ஆவிப்புறத்து இவை கூறி, 'யான் பொன்ற, யாதும் புகல்கிலை போலுமால், வன் தயாவிலி!' என்ன வருந்தினான்; |
என்று இவை கூறு -என்று இத்தகைய வார்த்தைகளைப் பேசி;அயா உயிர்க்கின்றவன் -பெருமூச்சு விடுகின்றவனாகிய இராமபிரான்;ஏடு அவிழ் கொன்றை- இதழ்கள் மலர்ந்த கொன்றை மரங்களை உடைய;ஆவிப்புறத்து - பொய்கையின் கரையில் இருந்து;யான் பொன்ற - (கொன்றையை நோக்கி) ''சீதையின் பிரிவால் நான் அழிந்துபடுதலைக் கண்டும்;யாதும் புகல்கிலை போலுமால் -ஒன்றும் ஆறுதலாகக் கூறாது இருக்கின்றாய் (ஆதலால்);வன் தயாவிலி -வன்மைக் குணமுடைய அருளற்ற கொடியை'';என்ன வருந்தினான் -என்று வருந்திப் பேசினான். பிரிந்தவர்கள் கொன்றையை நோக்கி வருந்துதல் நூல்மரபு. 'கொன்றைக் கொடியாய் கொணர்கின்றலையோ? என்றைக்கு உறவாக இருந்தனையோ?' என்று பின்னரும் (4205) கொன்றவை நோக்கி இராமன் பேசுவதைக் காண்க. 32 |