நமனார் -(உன் உயிர்கவர்ந்த) யமனார்;நறிது ஆம் நல் அமிழ்து - நறுமணமுடையதாகிய நல்ல அமுதத்தை;உண்ண நல்கலின் -உண்ணும்படி நீ தந்தமையால்;பிறியா இன் உயிர் -உடம்பை விட்டு நீங்காத இனிய உயிரை;பெற்ற பெற்றி -அடைந்துள்ள தன்மையை;தாம் அறியாரோ - தாம் இதுகாறும் அறிந்திலரோ?அது அன்று எனின் -அங்ஙனம் இல்லை என்றால்;உபகாரம் சிந்தியார் -(நீ அமுதளித்ததான) பேருதவியை நினையாதவராகிய;சிறியாரோ -அற்பக்குணம் உடையவரோ? நமனார் - வஞ்சப் புகழ்ச்சியாக 'ஆர்' விகுதி பெற்றது. பிரியா என்பது எதுகை நோக்கிப் 'பிறியா' எனத் திரிந்தது. வாலி கடல் கடைந்து அமரர்க்கு அமுதம் அளித்ததை 'அமரர் யாரும் எஞ்சலர் இருந்தார் உன்னால்' (4086) எனும் அங்கதன் கூற்றிலும் காண்க. தேவர் அனைவரும் வாலிக்குக் கடமைப்பட்டிருக்க, இங்குத் தேவர்களில் ஒருவனான யமனை மட்டும் குறிப்பிடக் காரணம், அவன் வாலியின் உயிரைப் பறித்தமையால் என்க. செய்த உதவியை அறிந்திருந்தும் அதனை நினைவில் கொள்ளாதார் சிறியராவராதலின், யமனின் அற்பக் குணத்தை எண்ணிப்புலம்பினாள். 166 | 4101. | 'அணங்கு ஆர் பாகனை ஆசைதோறும் உற்று, உணங்கா நாள்மலர் தூய், உள் அன்பினால் இணங்கா, காலம் இரண்டொடு ஒன்றினும் வணங்காது, இத் துணை வைக வல்லையோ? |
ஆசை தோறும் உற்று -திசைகள் தோறும் சென்று;உள் அன்பினால் இணங்கா -உள்ளத்துப் பக்தியோடும் கூடி;உணங்கா நான் மலர் தூய் - வாடாத புதிய மலர்களைத் தூவி;காலம் இரண்டொடு ஒன்றினும் -காலை, மாலை நண்பகல் ஆகிய மூன்று காலங்களிலும்;அணங்கு ஆர் பாகனை - மாதொரு பாகனாகிய சிவபெருமானை;வணங்காது -வழிபடாமல்;இத்துணை -இவ்வளவு நேரம்;வைக வல்லையோ -தங்கியிருக்க வல்லாயோ? வாலி நாள்தொறும் எல்லாத் திசைகளுக்கும் சென்று சிவபிரானை வழிபட்டு வரும் வழக்கமுடையவன் என்பதை 3822, 3825, எண்ணிட்ட பாடல்களிலும் காண்க. 'கோலமா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி, வாலியார் வழிபடப் பொருந்தினார்'; நீல மா மணிநிறத் தரக்கனை இருபது கரத்தோடு ஒல்க. வாலினால் கட்டிய வாலி வழிபட வணங்கும் கோயில். என்னும் திருஞானசம்பந்தர் தேவாரமும் (வடகுரங்காடுதுறை : 6,8) ஈண்டுக் காணத்தக்கது. நாள்மலர் - அன்றலர்ந்த மலர்; வாலியின் சிவபூசையைத் தாரை நேரில் அறிந்தவளாதலின் 'வணங்காது இத்துணை வைக வல்லையோ' எனப்புலம்பினாள். 'முப்போதும் திருமேனி தீண்டுவார்' என்று நம்பியாரூரரும் மூன்று காலங்களைக் குறித்துள்ளமை காண்க. திருத்தொண்டத் தொகை. (10.7) 167 | 4102. | ' ''வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய்! தரை மேலாய்! உறு தன்மை ஈது?'' எனக் |
|