பக்கம் எண் :

வாலி வதைப் படலம் 295

 நின்றாள்; அந் நிலை நோக்கி, நீதி சால்,
வன் தாள் மால் வரை அன்ன, மாருதி.

     என்றாள் -என்று புலம்பினளாய தாரை;இன்னன பன்னி -
இத்தன்மையனவான சொற்களை மீண்டும் மீண்டும் சொல்லி;இன்ன லோடு
ஒன்று ஆனாள் -
துன்பத்தோடு ஒன்று பட்டவளாய்;உணர்வு ஏதும்
உற்றிலாள் -
தன் உணர்வு சிறிதும் அடையாதவளாய்;நின்றாள் -
செயலொழிந்து நின்றாள்;அந்நிலை நோக்கி -(தாரையின்) அந்த
நிலைமையைக் கண்டு;நீதி சால் -நீதி நிறைந்தவனும்;வன்தாள் -வலிய
முயற்சியுடையவனுமான;மால்வரை அன்ன மாருதி -பெரிய மலையினை
ஒத்த தோற்றமுடைய அனுமன். . . .

     இப்பாடல் அடுத்த இரு பாடல்களோடு குளகமாய் இயைந்து வினை
முடிபு கொள்ளம்.  அனுமன் நீதி நெறியும் வலிய முயற்சியும் உடையவன்
என்பதைச் சுக்கிரீவனை இராமனிடம் நட்புக் கொள்ளச் செய்த
நிலையிலிருந்தே அறியலாம்.  மாருதிக்கு மால் வரை உவமை.  ''பொன் உருக்
கொண்ட மேரு, புயத்திற்கும் உவமை போதாத் தன் உருக்கொண்டு நின்றான்''
(3781) என்ற உவமை காண்க.  'மேரு மலை போன்ற பொன்மேனியுள்ளவன்'
என அனுமன் கூறப்படுவதால் வரை இங்கே மேரு மலை எனலாம்.
அழித்தற்கு அருமை, அளக்க முடியாத நிலை, தோற்றம், வலிமை, பெருமை
ஆகியவற்றால் அனுமனுக்கு மலை உவமைஆயிற்று.               177

4112. மடவாரால், அம் மடந்தை முன்னர் வாழ்
இடம் மேவும்படி ஏவி, வாலிபால்
கடன் யாவும் கடைகண்டு, கண்ணனோடு
உடன் ஆய், உற்றது எலாம் உணர்த்தலும்,

     மடவாரால் -வானர மகளிரைக் கொண்டு;அம்மடந்தை -அந்தத்
தாரையை;முன்னர் வாழ் இடம் -முன்பு (அவள்) வாழ்ந்திருந்த
அந்தப்புரத்திற்கு;மேவும்படி ஏவி -செல்லும்படி அனுப்பிவிட்டு;வாலிபால்-
வாலியின் பொருட்டு;கடன் யாவும் கடை கண்டு -செய்ய வேண்டிய
இறுதிக் கடன்களை எல்லாம் (அங்கதனைக்கொண்டு) செய்து முடிதது;
கண்ணனோடு -
இராமனோடு;உடன் ஆய் -சென்று சேர்ந்து;உற்றது
எலாம் உணர்த்தலும் -
நடந்த செய்திகளை எல்லாம் சொன்ன அளவில் . . .

     புலம்புகின்ற தாரையை அவள் தோழியரான வானர மகளிரைக் கொண்டு
அந்தப்புரத்திற்குச் செலச் செய்து அங்கதனைக் கொண்டு ஈமக் கடன்களை
நிறைவேற்றியபின் நிகழ்ந்த செய்திகளை அனுமன் இராமனிடம் உரைத்தான்
என்பதாம்.  இங்குக் கரியோன் என்னும் பொருளினதாகிய கண்ணன் என்ற
பெயர் கண்ணன் அவதாரத்தைக் குறிக்காமல் திருமாலின் அமிசமாகிய
இராமனைக் குறித்தது.  இராமனைக் கண்ணன் எனக் குறித்தமை 'யாவர்க்கும்
கண்ணன்' என்றே ஓதிய பெயர்' (1068), 'கண்ணன் தன் நிறம் தன் உள்ளக்
கருத்தினை நிறைத்து' (1120), சுவண வண்ணனோடு கண்ணன்' (2553),
'கருணை அம் கோயிலுள் இருந்த கண்ணனை' (6411), என்னும் இடங்களிலும்
காண்க.