பக்கம் எண் :

அரசியற் படலம் 301

பெருமைக்குரிய அந்தச் சுக்கிரீவனுக்கு;துறையோர் நூல்முறை -
நெறிமுறைகளில் வல்லவர்கள் கூறிய நூல்களில் கூறிய முறைப்படி;மௌலி
சூட்டினான் -
முடி சூட்டினான்.

     இராமன், நல்நெறிக்கு இறையோன் என்பதை நூல் முழுவதிலும்
காணலாம்.  'தோன்றிய நல்லறம் நிறுத்தத் தோன்றினான்' (1769), 'நியாயம்
அத்தனைக்கும் ஓர் நிலயம் ஆயினான்' (2429), 'புவிக்கு எலாம் வேதமே அன
இராமன்' (1453), 'நின் செய்கை கண்டு நினைந்தனவோ, நீள் மறைகள்? உன்
செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ?' (3689), 'உண்டு எனும்
தருமமே உருவமா உடைய நின் கண்டு கொண்டேன்' (4066), 'அறநெறி நிறுத்த
வந்தது' (4073) அறத்தை முற்றும் காவற்குப் புகுந்து நின்றார் காகுத்த வேடம்
காட்டி' (7421) என்பன காண்க.

வான்மீகத்தில் இந்த முடிசூட்டு விழா மிக விரிவாகக்கூறப்பட்டுள்ளது.      5

சுக்கிரீவனுக்கு இராமன் கூறிய அறிவுரை

4120.பொன் மா மௌலி
      புனைந்து, பொய் இலான்,
தன் மானக் கழல்
      தாழும் வேலையில்,
நன் மார்பில்
      தழுவுற்று, நாயகன்,
சொன்னான், முற்றிய
      சொல்லின் எல்லையான்:

     பொன் மா மௌலி புனைந்து -(சுக்கிரீவன்) பொன்னாலான சிறந்த
மணிமுடியைத் தரித்துக்கொண்டு;பொய் இலான்தன் -பொய்ம்மொழி
பேசாதவனான இராமனின்;மானக் கழல் தாழும் வேலையில் -பெருமை
பொருந்திய திருவடிகளில் வீழ்ந்து வணங்கிய பொழுது;முற்றிய சொல்லின்
எல்லையான் -
நிறை மொழியின் எல்லையில் நிற்பவனாகிய;நாயகன் -
தலைவனுமான இராமன்;நன் மார்பில் தழுவுற்று -(அவனைத்) தன் நல்ல
மார்போடு அணைத்துக் கொண்டு;சொன்னான் -(அறிவுரைகளைக்)
கூறலானான்.

     சுக்கிரீவனுக்கு வாக்கு அளித்தவாறு வாலியைக் கொன்று
நாட்டாட்சியைக் கொடுத்துத் தான் கூறியதைத் தவறாது நிறைவேற்றி
வைப்பவனாதலின் இராமனைப் 'பொய்யிலான்' என்றார்.  முற்றிய சொல்லின்
எல்லையான் என இராமனின் பரத்துவ நிலை குறிக்கப்பட்டது.  அயோத்தியில்
முடிசூடும் முன் வசிட்டர் இராமனுக்குக் கூறியதையும், சித்திர கூடத்தில்
இராமன் பரதனுக்குக் கூறியதையும், இங்குச் சுக்கிரீவனுக்கு இராமன்
கூறுவதையும் காண்கையில் முடிசூடும் மன்னனுக்கு ஆன்றோர் அறவுரை
பகர்தல் மரபு என்பது புலனாகிறது.                                   6

ஆசிரிய விருத்தம்

4121. 'ஈண்டுநின்று ஏகி, நீ நின்
      இயல்பு அமை இருக்கை எய்தி,