மிகவும் விலகாமலும், மிகவும் நெருங்காமலும்;தேவரின் தெரிய நிற்றி - (பிறர் உன்னைத்) தேவர்கள் போலக் கருதும்படி நிற்பாயாக. அமைச்சர் முதலாயினோர் அரசனை அணுகாது நெடுந்தொலைவில் இருத்தலும், மிக அணுகி நெருக்கமாக இருத்தலும் தவிர்க்க வேண்டுவன. மிக விலகினால் அரசனுக்குப் பயன்படாமலும், மிக நெருங்கினால் அரசன் தன்னை அவதமதித்ததாக நினைக்கவும் கூடுமாதலாலும் அகலலும் அணுகலும் நீக்க வேண்டுவன ஆயின. 'மன்னர் என்பார் எரிஎனற்கு உரியார் என்றே எண்ணுதி. . . . சிற்றடிமை குற்றம் பொறுப்பர் என்று எண்ண வேணடா' (4078) என வாலி சுக்கிரீவனுக்குக் கூறியதையும் 'அகலாது அணுகாது தீக்காய்வார்போல்க இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்' எனக் குறள் (691) குறிப்பதையும் காண்க. தேவரின் தெரிய நிற்றி - அரசன் பிறப்பால் நிலவுலகனே ஆயினும், அவன் செயலால் மக்கட்குத் தெய்வமாகக் கருதப்பட்டதால் தேவர்களைப் போலப் பிறர்க்கு நீ விளங்குவாய் என்றான். ''முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும் என்று குறளும் (388), 'திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே' (திருவாய்மொழி - 4 - 8 -) என்று ஆழ்வார் பாசுரமும் கூறியமை காண்க. தகுதியல்லாத வழியால் நட்புக் கொள்ளலாகாது என்பதற்குத் 'தூய்மை சால் புணர்ச்சி பேணி' என்றான். 'சேய்மையோடு அணிமை இன்றி' என்ற செய்தி வான்மீகத்தில் வாலி அங்கதனுக்கு அறிவுரை கூறுகையில் 'யாருடனும் அதிக நட்புச் செய்யத்தக்கதன்று; நட்பு இல்லாமையும் செய்யத்தக்கதன்று; இரண்டும் பெரிய குற்றமாம். ஆகையால் இடை நிகராய் ஒழுகவேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. 8 இராமன் உணர்த்தும் நல்லரசு 4123. | ''புகை உடைத்து என்னின், உண்டுபொங்கு அனல் அங்கு'' என்று உன்னும் மிகை உடைத்து உலகம்; நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே; பகையுடைச் சிந்தையார்க்கும், பயன் உறு பண்பின் தீரா நகையுடை முகத்தை ஆகி, இன் உரை நல்கு, நாவால். |
உலகம் -இந்த உலகம்;புகை உடைத்து என்னின் -(ஓரிடத்தில்) புகை உண்டாயிற்று என்றால்;அங்குப் பொங்கு அனல் உண்டு - அவ்விடத்தில் கிளர்ந்தெழுகின்ற நெருப்பு உண்டு;என்று உன்னும் -என்று யூகித்தறிகின்ற;மிகை உடைத்து -சிறப்பறிவைக் கொண்டுள்ளது. நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே -(ஆயினும் இந்த அனுமான அறிவோடு) நூல் வல்லோரால் கூறப்படும் சூழ்ச்சியும் (அரசர்க்கு) வேண்டத்தக்கதாகும்; பகையுடைச் சிந்தையார்க்கும் -(உன்னிடம்) பகைமை கொண்ட மனமுடையார்மாட்டும்;பயன் உறு பண்பின் தீரா -(அவரவர் தகுதிக்கேற்பப்) பயன் உண்டாகும்படி இயல்பறிந்து பண்புடன் நடந்து கொள்வதினின்று மாறாமல்;நகையுடை முகத்தை |